ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடுத்து நிறுத்துங்கள்..

சென்னையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பில் சினிமா இயக்குனர்கள் பாரதிராஜா, சேகர், தங்கர்பச்சான், அமீர் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது.

அப்போது அவரிடம் மனு ஒன்றை சினிமா இயக்குனர்கள் அளித்தனர். முதல்- அமைச்சர் மட்டுமல்லாமல் தாங்களும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் விவசாயிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள இன்னல்களையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

தற்போது நடுத்தெருவுக்கு வந்துள்ள விவசாயிகளின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தமிழகத்தில் நடக்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இல்லாவிட்டால் அந்த போட்டிகளை நிறுத்தும் போராட்டங்களை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்றும் கூறினர்.

சினிமா இயக்குனர்கள் நான்கு பேரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்தும்கூட வேறு வழியில்லாமல் இரவும் பகலும் வேளாண் விளைபொருட் களை நமக்கு உற்பத்தி செய்து தரும் விவசாயிகளின் விளை நிலங்கள் அனைத்தும் மீத்தேன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், எண்ணெய் வாயு மண்டலங்கள் போன்ற திட்டங்களால் அழியப் போவதை அறிந்து, போராடியே வாழ்நாளைக் கழிக்கின்றனர்.

காவிரியின் பாசனப் பரப்பில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விளைவித்த நிலங்கள், இன்று நியாயமாக கிடைக்க வேண்டிய நீர் மறுக்கப்படுவதால் வறண்டு போய் கிடக்கின்றன. விவசாயிகளுக்கு சிக்கலாக இருந்த காவிரி மேலாண்மை வாரியம் தற்போது மொத்த தமிழக மக்களின் பிரச்சினையாக மாறிவிட்டது.

மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் டெல்லியில் பாராளுமன்றத்தை தமிழக எம்.பி.க்கள் புறக்கணித்து எதிர்ப்பை தெரிவித்தனர். ஆளும் கட்சி முதல் அனைத்து கட்சிகளும் தொடர்ந்து போராட்டத்தில் குதித்துள்ளன. நாளுக்கு நாள் போராட்டங்கள் பெருகி, மக்களின் மனநிலை கொந்தளித்துப் போய் கிடக்கிறது.

இந்த சூழ்நிலையில் சென்னையில் 10-ந் தேதியில் இருந்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவது, மக்கள், கட்சிகள், இயக்கங்கள், மாணவர்கள், விவசாயிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஏற்கனவே உள்ள கொந்தளிப்பான சூழ்நிலையில், இந்த போட்டிகள் நடந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே காவிரி மேலாண்மை வாரிய சிக்கல் தீர்ந்த பின்னர் போட்டிகளை நடத்திக்கொள்ளலாம். இதுதான் மக்களின் கருத்து. விவசாயிகளின் பிரச்சினை உங்களுக்கு தெரியாததல்ல.

தமிழகத்தின் 3 பல்கலைக்கழகங்களிலும் வேறு மாநில, வேற்று மொழிக்காரர்களை துணை வேந்தர்களாக நியமித்தது, பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க நீங்கள் எவ்வளவு சிறப்பான முறையில் ஆட்சி செய்தாலும், மத்திய அரசின் ஆணைக்கு இணங்குவதால் தமிழக மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது.

இதை பொய்யாக்கும் விதத்தில் ஐ.பி.எல். போட்டிகளை இந்த சூழ்நிலையில் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டு நல்வழி காட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-athirvu.com