நடிக்க முடியாது! வடிவேலு கடிதத்தால் ரசிகர்கள் ஷாக்

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது ஷூட்டிங் துவங்கி சில நாட்களிலேயே நின்றுபோனது.

24ம் புலிகேசியை தயாரித்து வரும் இயக்குனர் ஷங்கர் இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இந்த பிரச்சனை பற்றி பதில் அளிக்கும்படி சங்க வடிவேலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. நடிகர் சங்கமும் இதில் தலையிட்டது.

இந்த சர்ச்சைக்கு வடிவேலு தற்போது பதில் அளித்துள்ளார். அதில் தான் இனி புலிகேசி படத்தில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

“இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் நடிக்க 1-6-2016இல் ஒப்புக் கொண்டேன். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் படத்தை முடித்துவிடுவதாகவும், அதுவரை வேறெந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால், வேறு படங்களில் நடிப்பதை நான் தவிர்த்தேன்.”

“நான் நடித்துத் தர மறுத்திருந்தால், பட நிறுவனம் டிசம்பர் 2016க்குள் ஏன் புகார் தரவில்லை? ஒப்பந்த காலம் முடிந்து ஒரு வருடத்திற்குப் பிறகு கெட்ட நோக்கோடு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, 2016 – 2017 ஆண்டு காலங்களில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தேன். இதனால் எனக்கு பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டது.”

“இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் என்னை வற்புறுத்துவதற்கு முன்பு, என்னை அழைத்து கருத்து கேட்காதது விதிகளுக்கு முரணானது. இந்தப் படத்தில் நாசர் நடிப்பதால், நடிகர் சங்க நலனுக்காக அவரால் செயல்பட முடியாத நிலைமை உள்ளது. இதில் தொடர்ந்து நடித்தால், நான் ஒப்பந்தமாகி உள்ள வேறு படங்கள் பாதிக்கப்படும். ”

“பொருளாதார, குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என வடிவேலு கூறியுள்ளார்.

-cineulagam.com