எஸ்.வி.சேகர் வீடு மீது கல்வீச்சு 30 பேர் கைது

அடையாறு, நடிகரும், பா.ஜனதா கட்சியின் பிரமுகருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் பெண் நிருபர்கள் குறித்து தரக்குறைவாக ஒரு பதிவை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததால் உடனடியாக அந்த பதிவை அவர் நீக்கி விட்டார்.

இந்தநிலையில் நேற்று மாலை பத்திரிகையாளர்கள் சிலர், சென்னை மந்தைவெளி 5-வது டிரஸ்ட் கிராஸ் தெருவில் உள்ள எஸ்.வி.சேகரின் வீடு மற்றும் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர், திடீரென எஸ்.வி.சேகர் வீட்டின் மீது கல்வீசி தாக்கினர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பட்டினப்பாக்கம் போலீசார், அவர்களை தடுத்தனர். ஆனால் அதையும் மீறி அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் எஸ்.வி.சேகர் வீட்டின் முன்புறம் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் கிழிந்தன. கல்வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதையடுத்து பட்டினப்பாக்கம் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 30 பேரை கைது செய்து, அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர்.

-dailythanthi.com