சவுதி அரேபியாவின் முதல் சினிமா தியேட்டரில், ஹவுஸ் புல் ஆக பொங்கி வழியும் ரசிகர்கள்..

சினிமாப் படங்கள் காட்டப்படும் திரையரங்குகளை ஆபாசம் என்றும் பாவச்செயலாகவும் கருதி அனுமதிக்க மறுத்த சவுதி அரேபியா அரசு கடந்த 35 ஆண்டுகளாக சினிமாக்களை அங்கு திரையிட தடை விதித்துள்ளது.

இஸ்லாமிய கலாச்சரத்தையும் மத அடையாளத்தையும் சினிமா சீர்குலைத்து விடும் என்று அங்குள்ள மத தலைவர்கள் கருதியதால் இந்த தடை நீக்கப்படாமல் இருந்தது. இருப்பினும், சவுதி அரேபியாவில் தயாராகிவரும் திரைப்படங்கள் வெளிநாடுகளில் திரையிடப்படுகின்றன. கட்டண சேனல்கள் வழியாக உள்நாட்டில் ஒளிபரப்பாகின்றன.

‘யூடியூப்’ யுகத்தில் சினிமாக்கள் மீது தடை விதிப்பது பொருத்தமற்ற செயல் என அங்குள்ள இளம் தலைமுறையினர் கருதிவரும் நிலையில், தீவிரவாத சித்தாந்தங்களை அழித்து, புதிய சீர்திருத்தம் மற்றும் முன்னேற்றத்தை நோக்கி செல்லும் இஸ்லாமிய மிதவாத நாடாக சவுதி அரேபியாவை மாற்றப் போவதாகவும் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அறிவித்தார்.

இதைதொடர்ந்து, அங்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இசைக் குழுக்களின் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இதன் ஒருகட்டமாக, வெபல்லாண்டு காலமாக சினிமாக்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீக்கியது. சினிமா தணிக்கை குழு அமைக்கவும் புதிய திரையரங்கங்களை திறக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு சவுதி அரேபியாவின் கலைசார்ந்த பொருளாதாரத்தின் புதிய அத்தியாயமாக இருக்கும் என அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை மந்திரி அவாத் அல்அவாத் குறிப்பிட்டிருந்தார்.

வரும் 2030-ம் ஆண்டுக்குள் 2500 திரையரங்கங்கள் கொண்ட 350 வளாகங்களை கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் 30 ஆயிரம் பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும் 1,30,000 பேருக்கு பகுதிநேர வேலைவாய்ப்பும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவுதி தலைநகர் ரியாத் நகரில் முதன்முதலாக கட்டிமுடிக்கப்பட்ட முதல் திரையரங்கம் நேற்று திறக்கப்பட்டது. ஹாலிவுட் திரைப்படமான ‘பிளாக் பான்தர்ஸ்’ முதல் படமாக திரையிடப்பட்டது.

இந்த படத்தின் முதல்நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் முதல் 15 நிமிடங்களில் ஆன்லைன் மூலம் விற்றுத் தீர்ந்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து மற்ற காட்சிகளும் ‘ஹவுஸ் புல்’ ஆக ஓடிக் கொண்டிருப்பதை வைத்து 35 ஆண்டுகளாக சவுதி அரசால் தடை செய்யப்பட்டிருந்த சினிமாவின் மீது அந்நாட்டின் மக்கள் கடந்த 35 ஆண்டுகளாக கொண்டிருந்த மறைமுக மோகத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.

-athirvu.com