கன்னியாகுமரி: கடல்சீற்றத்தால் 18 கிராமங்கள் பாதிப்பு-ராட்சஅலையில் தரைமட்டமான வீடுகள் -மக்கள் பீதி

கன்னியாகுமரி: குமரிமாவட்டத்தில் 18 கிராமங்களில் 2-வது நாளாக இன்று கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 10 அடி உயரத்திற்கு மேல் கடல் அலை வீசி வருவதுடன், 150-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விடிய விடிய மீனவ மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய்பட்டினம், நீரோடி, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் நேற்று முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலலை வேகம் காரணமாக நேற்று நவஜீவன்காலணி பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதனால் வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்துகொண்டு வெளியே ஓடிவந்தனர்.

அதேபோல, வள்ளவிளை கரையோர பகுதியில் சில வீடுகளில் கடல் அலைகள் வீட்டுக்குள்ளும் புகுந்துவிட்டதால் மீனவ மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாயினர். இதனால் அவர்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்க அரசு சார்பில் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

மேலும் கொட்டில்பாடு, ராஜக்கமங்கலம் போன்ற பகுதிகளில் கடலலை 10 அடி முதல் 15 அடி உயரத்திற்கு மேல் காணப்பட்டது. கொல்லங்கோடு அருகே வள்ளவிளையில் கடல் சீற்றம் காரணமாக 3 வீடுகள் இடிந்துவிழுந்த நிலையில், தற்போதுவரை அங்கு அலையின் வேகம் குறையால் அப்பகுதி முழுவதும் தண்ணீர்சூழ்ந்து காணப்படுகிறது.

மாவட்டத்தின் கடல்சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லமுடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தேங்காய்பட்டினம், இரயுமன் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 படகுகளை கடலலை இழுத்துசென்றுவிட்டதால் அது மீனவர்களுக்கு கூடுதல் கவலையை அளித்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: