தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது..

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இன்று தொண்டர்களின் கேள்விகளுக்கு ‘யூடியூப்’ வலைதளம் மூலம் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

நான் அரசியலுக்கு வர வேண்டும் என்பது பல நாட்கள், பல ஆண்டுகள் யோசித்து எடுத்த முடிவு. அதற்கு காரணம் அரசியலுக்கு வரவேண்டுமா? வரவேண்டாமா? என்ற குழப்பம்தான்.

நான் மதிக்கும் தலைவர்களான காந்தி, பெரியார் போன்ற தலைவர்கள் அரசியலுக்கு வராமல் சீர் திருத்தங்களை மேற்கொண்டார்கள். அதற்கு அவர்களுக்கு நேரம் இருந்தது. இன்றைய கால கட்டத்தில் அவர்கள் இருந்திருந்தாலும் அரசியலுக்கு வந்திருக்க கூடும்.

நம்முடைய அஜாக்கிரதை, கவனிப்பு இல்லாமல் இருந்து விட்டதால் இப்போது அரசியலுக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நிஜமாகவே அரசியல் செய்ய நினைப்பவர்கள் மக்களை நோக்கி படியேறி செல்ல வேண்டும். நான் ஏறி வந்து கொண்டிருக்கிறேன்.

என்னை பொருத்தவரை அரசியலுக்கு ஏன்டா வந்தோம் என்று தோணவில்லை. ஆனால் சிலரை பார்த்து ஏண்டா அரசியலுக்கு வந்தீங்க என்று கேட்க தோன்றுகிறது. இளைஞர்கள் நினைத்தால் புரட்சி, போராட்டம் இல்லாமலே அரசுக்கு அழுத்தம் தரமுடியும். அப்படிப்பட்ட ஒரு கருவிதான் ஜனநாயகம்.

உறுப்பினர்கள் அல்லாத பலர் தன்னார்வலராக முன் வந்து நற்பணிகள் செய்ய தயாராகி வருகிறார்கள். நாட்டை வளர்க்க அவர்கள் எல்லாம் முக்கியமானவர்கள். தன்னார்வலர்களாக முன் வந்தவர்கள்தான் இந்த நாட்டை வளர்த்தவர்கள்.

இந்த மாதிரியான சமூக சீர்திருத்தங்களை செய்வதற்கு எனக்கு நேரமில்லை. எனவேதான் இந்த ஓட்டு அரசியலில் காலதாமதமாக இறங்கி இருக்கிறேன்.

கட்சியில் சேரும் உறுப்பினர்கள், ஆர்வமாக முன் வரும் தன்னார்வலர்கள் இவர்களை எல்லாம் பார்க்கும்போது அற்புதமான எதிர்காலம் இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

தன்னார்வலர்களுக்கான பணிகள் பல உள்ளன. நீர் நிலைகளை சுத்தம் செய்வதும், அதை காப்பாற்றுவதும் நமது கடமை. பள்ளிக்கூடங்களுக்கு நிறைய செய்யலாம். கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் இல்லை. பல பள்ளிகளில் கரண்ட் இல்லை. பல பள்ளிகளில் மின் கட்டணம் கட்டாததால் மின்சாரம் தடைபட்டு கிடக்கிறது.

நிறையபேர் சமூக பணிகளை செய்கிறார்கள். அதில் இருந்து நாம் எப்படி வித்தியாசப்பட போகிறோம் என்பதை பார்க்க வேண்டும். ஏனென்றால் நாம் அரசியல் கட்சியாகவும் இருக்கிறோம்.

வெகு விரைவில் ‘மய்யம் விசில் ஆப்’ உங்கள் கைகளுக்கு வந்துவிடும். அதன்பிறகு நாம் செய்ய வேண்டிய பணிகள், செய்யும் பணிகள், குறைபாடுகள் உள்ள இடங்கள் எல்லாவற்றையும் சொல்ல முடியும்.

அநீதி அக்கிரமங்கள் நடக்கும் இடங்களை படம் பிடித்து காட்ட முடியும். அதை எந்த அதிகாரியிடம் கொண்டு சேர்க்க வேண்டுமோ, அங்கே சேர்ப்போம். இது படிப்படியாக நடக்கும். நாளை நாமும் பொறுப்பு என்று வரும்போது நம்மை கண்காணிக்கும் அமைப்பாகவும் இது விளங்கும்.

குறைகள் இருப்பதை மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்ட வேண்டும். விசில் சத்தம் உச்ச தொனியில் ஒலிக்கும்போது ஆட்சியாளர்கள் பாராமுகமாக இருக்க முடியாது. கண்டிப்பாக அரசாங்கம் தீர்வை நோக்கி நகர்ந்தே தீரவேண்டும்.

எந்த போராட்டத்தையும் சில நாட்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் போராட்டக்காரர்கள் விட்டு விடுவார்கள் என்று நினைக்கலாம்.

இப்போது நடப்பது குடிநீருக்கான போராட்டம். இந்த போராட்டத்தையும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் மறந்து விடுவார்கள் என நினைத்தால் அதைவிட அரசியல் முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது.

ஓட்டு அரசியலுக்கு ஏன் வர வேண்டும் என்று நினைத்துதான் அரசியலுக்கு வராமல் இருந்தேன். நம்முடைய அஜாக்கிரதையால் அரசியலை மோசமான நிலைக்கு தள்ளி விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி உள்ளது. எல்லோரும் கண்டு கொள்ளாமல் விட்டதால் யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற நிலை வந்து விட்டது. அதை மாற்ற மீடியாக்கள் மூலம் முயற்சித்தேன்.

மீடியா என்பது ஒரு ஆராய்ச்சி மணிதான். மக்கள் மற்றும் மீடியாவின் கேள்விக்கு ஏன் பதிலளிக்க வேண்டும் என்ற ஆணவம் ஆட்சியாளர்களுக்கு வந்து விட்டது. இதற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்திருக்கிறேன்

நல்ல அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அடுத்த தேர்தலில் நான் முதல்வரா, எதிர்க்கட்சி தலைவரா எது ஆக வேண்டும் என நினைக்கிறீர்கள் என என்னிடம் கேட்கிறீர்கள். ஆனால் நான் என்ன ஆக வேண்டும் என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

புரட்சி, போராட்டம் தேவைப்பட்டால் செய்யலாம். ஆனால் இளைஞர்கள் நினைத்தால் மிக பெரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டும். ஜனநாயகம் என்ற மிகப்பெரிய ஆயுதம் கொண்டு, வன்முறையின்றி அதை செய்ய முடியும். வெறும் டுவிட்டரில் மட்டும் கருத்து சொல்கிறேன் என்ற நிலை மாறி 2 மாதம் ஆகி விட்டது. உடலில் ஓடும் ரத்தம் கொதிக்க கொதிக்க வறுமை போய்விடும்.

நமது சமூகத்தில் சாதி பிரிவினைகள் தான் வறுமைக்கு காரணம் என நினைக்கிறேன். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லி வந்தது ஒரு சமூகம். ஏழ்மை உருவாக்கப்படுவது. அதற்கு வண்ணமில்லை. வறுமையின் நிறம் சிவப்பு என்பது வெறும் சினிமாவின் பெயர் தான்.

வன்முறை இல்லாமல் நியாயமாக மக்களுக்கு செய்ய வேண்டியதை, அவர்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும். மக்கள் நலனுக்கு இடையூறு செய்பவர்களை எப்படி கையாள வேண்டுமோ அப்படி பதில் சொல்ல வேண்டும். விவசாயிக்கு பெண் தர மறுக்கும் நிலை இருக்கும் போது எப்படி விவசாயம் செய்ய முன்வர முடியும் என்று கேட்கிறீர்கள். அதற்கு சிறந்த உதாரணம் நான் தான்.

கூத்தாடி என்று கூறி ஊருக்கு வெளியே ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் தான் இன்று வளர்ச்சிக்கான வழி குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்னை கூத்தாடி என்று சொன்னால் கோபப்படமாட்டேன். அப்படி சொன்னால் சிதம்பரத்தில் போய் பாருங்கள் அங்கே ஒருவர் கூத்தாடிக் கொண்டிருக்கிறார் என்று தான் சொல்வேன்.

பாலியல் குற்றங்களை தடுக்க அரசாட்சி செய்ய வேண்டியதை விட மனசாட்சி செய்ய வேண்டும். பலாத்கார குற்றங்களை தடுக்க அரசு திட்டமும், சட்டமும் கொண்டு வர வேண்டியதில்லை. 12 வயது வரை சிறுமி என்றால் 13, 14, 15 வயது பிள்ளைகளும் சிறுமிகள்தானே. கற்பும், நேர்மையும் ஆண்களுக்கும் உண்டு.

ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் ஆண் மகனுக்கும் பெண்ணை எப்படி மதிக்க வேண்டும் என கற்று தர வேண்டும். ஆண் பிள்ளையை கண்டிக்காமல், பெண்களை மட்டும் பாதுகாப்பாக இரு என கூறி வளர்ப்பது சரியாகாது.

மய்யத்தை மாதாந்திர இதழாக கொண்டு வருவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. இப்போது தான் கட்சி ஆரம்பித்திருக்கிறேன், டிவி ஆரம்பிப்பதை பற்றி இனிதான் யோசிக்க வேண்டும். ஜாதி ஒழிக்கப்பட வேண்டிய நோய். அதற்கு தேர்ந்தெடுக்கும் பாதை நாம் முடிவெடுக்க வேண்டியது.

ஜாதியை பற்றி பேசுவது மட்டுமல்ல, நினைப்பதையும் விட வேண்டும். அதற்கான முயற்சியை இன்றே செய்வோம். அடுத்த தலைமுறை பிள்ளைகள் ஜாதி என்று ஒன்று இருந்ததா என கேட்கும் நிலை வர வேண்டும். நம்மால் முழுவதுமாக செய்ய முடியவில்லை என்றாலும் அதற்கான விதையை தூவிச் செல்ல வேண்டும்.

முதலில் ஒரு கிராமத்தை தத்தெடுத்தேன். இன்னும் சில கிராமங்களை தத்தெடுக்க நினைத்துள்ளோம். அதுபற்றி அந்த கிராம மக்களிடம் பேச வேண்டும். அவர்களும் முழு சம்மதத்துடன் அதில் ஈடுபட வேண்டும்.

கிராம சுயராஜ்யம் சாத்தியமானதுதான். வெறும் வணிகத்தை மட்டுமே நம்பி இருந்த ஐரோப்பாவில் பரவிய பிளேக் நோயால் நிலையாமையை உணர்ந்தார்கள். நாடு ஆபத்தான நிலையில் இருக்கிறது. அதில் இருந்து மீள வேண்டும் என்பதற்காக எல்லோரும் நாட்டுக்காக சேவை செய்ய தொடங்கினார்கள்.

இன்று அந்த நிலையில் தான் தமிழகமும் ஆபத்து சூழ்ந்து இருக்கிறது. இதில் இருந்து மீட்கப்பட வேண்டும். 63 வயதில்தான் எனக்கும் நிலையாமை புரிந்து இருக்கிறது.

என்னை கட்சியின் கடைகோடி தொண்டனாக தான் நினைக்கிறேன். நான் கட்சியின் ஆரம்ப கால ரசிகன். இறுதி வரை கடைமட்ட தொண்டனாக இருக்க வேண்டும் என முடிவு செய்தே கட்சி துவங்கி உள்ளேன்.

2 நாட்களில் அடுத்த கட்ட நடவடிக்கை துவங்கும். அதுவும் கிராமத்தை நோக்கிய பயணத்தின் பயணமாக இருக்கும். பத்திரிகை மூலமாக தெரிய வரும். அதை அறிக்கை என நினைக்க வேண்டாம். நாங்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டியதற்கான திட்டமாக இருக்கும். அதனை ஏப்ரல் 24-ல் வெளியிட உள்ளோம்.

இவ்வாறு கமல் பேசினார்.