மேகாலயா, அருணாச்சலில் சிறப்பு அதிகாரச்சட்டம் வாபஸ்… உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டெல்லி : மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அமலில் இருந்த ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரச்சட்டம் வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த இரு மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்பை விட அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

தீவிரவாதிகள் மற்றும் உள்நாட்டு போராளி குழுக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் இருந்தது.

போடோலாந்து, நக்சலைட், மாவோயிஸ்ட், நாகா விடுதலை முன்னணி ஆகிய அமைப்பினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இந்த அவசர சட்டம் அமலுக்கு வந்தது. பொதுச் சொத்துகளை நாசப்படுத்துவோரை உடனடியாக கைது செய்யவும், தேவை ஏற்படும்போது தற்காப்புக்காக சுட்டுக் கொல்லவும், சந்தேகத்துக்குரிய பகுதிகளில் முன் அனுமதி இன்றி சோதனை நடத்தவும் துணை ராணுவம், போலீசார் உள்ளிட்டவர்களுக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

ஜம்மு-காஷ்மீரில் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் முன்பிருந்ததைப்போல் தீவிரவாத அச்சுறுத்தல் இப்போது இல்லை. அங்குள்ள போராளிகள் ஒடுக்கப்பட்டு நிலைமை மேம்பாடு அடைந்து வருவதால் இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் சர்வதேச பொது மன்னிப்பு சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், மேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் கடந்த 31-3-2018 முதல் முற்றிலுமாக வாபஸ் பெற்றப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக உயர்அதிகாரி தெரிவித்துள்ளார். இதேபோன்று அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்திலும் 16 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமலில் இருந்த இந்த சட்டம் தற்போது 8 காவல் நிலைய எல்லைகளுக்குள் மட்டும் அமலில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாகாலந்து, மணிப்பூர், ஜம்மு காஷ்மீரில் சில ஆண்டுகளாகவும் அசாமில் 1990 முதலும் சிறப்பு ஆயுதப்படை அவசரச்சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் மேகாலயாவில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அவசரச்சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டதற்கு சமூக போராளி ஐரோம் ஷர்மிளா வரவேற்பு தெரிவித்துள்ளார். மணிப்பூரிலும் முற்றிலுமாக இந்தச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று ஷர்மிளா விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆயுதப்படை சிறப்பு சட்டத்துக்கு எதிராக 16 ஆண்டுகள் போராடியவர் இரோம் ஷர்மிளா. தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் கொடைக்கானலில் குடியேறி வசித்து வரும் ஷர்மிளா மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவை மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: