சுங்கை சிப்புட் போட்டியில் இருந்து விலகிச் செல்ல, ஜெயக்குமார் தயார்

மலேசிய சோசலிசக் கட்சியின் ஒரே எம்பி மைக்கேல் ஜெயக்குமார் சுங்கை சிப்புட் தொகுதி பி.என். வசமாவதிலிருந்து காப்பாற்ற, வரவிருக்கும் தேர்தலில், போட்டியிடுவதிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இல்லாத பி.எஸ்.எம்., பன்முனை போட்டி நடந்த போதிலும், பாரிசானின் வெற்றியைத் தவிர்க்கும் ஒரு முயற்சியாக இந்த முன்மொழிவை விவாதிக்கிறது.

“பி.என்.-னிடம் தாரைவார்த்து கொடுக்க, நாம் இந்த இடத்தில் நிற்க வேண்டுமா என்று, சில ஆதரவாளர்கள், கட்சியில் உள்ளவர்கள் மற்றும் எங்கள் கிளை அலுவலகத்தில் உள்ளவர்கள் கேள்வி கேட்கிறார்கள்,” என்று ஜெயக்குமார் கூறினார்.

ஹராப்பான், பாஸ் இரண்டும் தங்கள் வேட்பாளர்களைச் சுங்கை சிப்புட்டில்  களமிறக்க உள்ளதால், அங்கு 4 முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது, இது பாரிசானுக்கு வெற்றியைக் கொண்டுவரும் என பல ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

2008-ஆம் ஆண்டு, நீண்டகாலமாக மஇகா முன்னாள் தேசியத் தலைவர் எஸ்.சாமிவேலுவிடம் இருந்த அத்தொகுதியை, பிகேஆர் சின்னத்தின் கீழ் டாக்டர் ஜெயக்குமார் கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் வென்றுள்ளார்.

உள்ளூர் மக்களிடையேப் பிரபலமான மருத்துவரான ஜெயக்குமார், வாக்காளர்களின் நன்மைக்காக தான் நிற்கக்கூடும், ஆனால் அது எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளை, பி.எஸ்.எம் மற்றும் ஹராப்பானுக்கு இடையே பிளவுபடுத்தும் என்று கூறினார்.

“ஆக, இதில் சரியான முடிவு என்னெவென்றால், போட்டியிடுவதிலிருந்து வெளியேறுவதுதான். தேர்வு செய்ய (ஹராப்பான் மற்றும் பி.எஸ்.எம்-க்கு இடையில்) மக்கள் மிகவும் குழப்பமடைவார்கள் என்று எனக்குத் தெரியும்.

“எங்களிடம் நல்ல வேட்பாளர் இருப்பதாக நாங்கள் நம்புகின்றபோதும், சுங்கை சிப்புட் நாற்காலியை இழப்பதற்குக் காரணம் நாங்கள்தான் எனும் குற்றச்சாட்டை சந்திக்க நாங்கள் விரும்பவில்லை.”