அம்னோமீது வழக்கு இருந்தாலும் பிஎன் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடலாம்

அம்னோமீது   நீதிமன்றத்தில்    வழக்கு   தொடுக்கப்பட்டிருந்தாலும்    பிஎன்  வேட்பாளர்கள்    வரும்   சனிக்கிழமை    14வது   பொதுத்   தேர்தலுக்கான   வேட்பு  மனுவைத்   தடையின்றித்    தாக்கல்    செய்யலாம்   என்கிறார்   அம்னோ  சட்ட   ஆலோசகர்   முகம்மட்  ஹவாரிஸாம்  ஹருன்.

வேட்பாளர்களின்  நியமனக்  கடிதத்தில்   பராமரிப்புப்  பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்    பிஎன்  தலைவர்    என்ற   முறையில்தான்   கையெழுத்திட்டுள்ளார்,  அம்னோ    தலைவராக   அல்ல.

“மே  9  பொதுத்   தேர்தலில்   போட்டியிடும்    வேட்பாளர்கள்  13  கட்சிகளின்  கூட்டணியான   பிஎன்   சார்பில்தான்   போட்டியிடுகிறார்கள். அவரவர்   கட்சியின்  சார்பில்   அல்ல.

“எனவே  எதிரணி   உள்பட   சில    தரப்புகள்     பிஎன்  ஜிஇ14-இல்   போட்டியிட  முடியாது    என்று  கூறுவது   சரியல்ல”.  என்றாரவர்.

எது  எப்படியாயினும்   வேட்பு  மனு   தாக்கல்     செய்யும்   வேட்பாளர்களின்  தகுதி  குறித்து   இறுதி  முடிவு   செய்யும்   அதிகாரம்   தேர்தல்   ஆணையத்திடம்தான்   உள்ளது    என்றும்  அவர்   சொன்னார்.