மகாதிர்: ஹரப்பான் 112க்கும் கூடுதலான இருக்கைகளைப் பெற்றுள்ளது, இசி பாரத்தில் கையொப்பமிட மறுக்கிறது என்கிறார்

 

அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவைப்படும் 112க்கும் கூடுதலான நாடாளுமன்ற இருக்கைகளை ஹரப்பான் கூட்டணி பெற்றுள்ளது என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் கூறிக் கொண்டுள்ளார்.

பெட்டாலிங் ஜெயா, ஷெரடன் ஹோட்டலில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மகாதிர், ஹரப்பான் ஆறு மாநிலங்களை – பினாங்கு, சிலாங்கூர், மலாக்கா, நெகிரி செம்பினான், ஜோகூர் மற்றும் கெடா – பிடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“பெடரல் அரசாங்கத்தை அமைக்க நமக்கு 112 இருக்கைகள் தேவைப் படுகின்றன.

“நாம் அதற்கும் கூடுதலானவற்றை பெற்றுள்ளோம், பிஎன்னின் எண்ணிக்கை அதிகக் குறைவானது”, என்று அவர் கூறினார்.

பெடரல் அரசாங்கத்தை அமைப்பதற்கு இன்னும் கூடுதலான இருக்கைகளை சாபாவிலிருந்து பெறுவதற்கான நம்பிக்கையை ஹரப்பான் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணையம் பாரம் 14 இல் கையொப்பமிட மறுப்பதின் வழி தேர்தல் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிமிக்கப்படுவதைத் தாமதப்படுத்தி வருகிறது என்று மகாதிர் முன்னதாக கூறியிருந்தார்.