யானையால் 25 தமிழர்கள் பலி..

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றையதினம் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வாகனேரி சுற்றுலா விடுதி வீதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் குமார் (வயது 34) என்பவரே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து வாகனேரி குளத்திற்கு அருகில் காணப்படும் சடலத்திற்கு முன்பாக பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இதன்போது, ”நாங்களும் வாழ வேண்டும்” ”வாகனேரி மக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவும்” ”யானை வேலியை அமைத்து தாருங்கள்” ”குடிநீர் வசதியை ஏற்படுத்தி தாருங்கள்” ”வீதி விளக்குகளை அமைத்து தாருங்கள்” ”எத்தனை காலம் இப்படி வாழ்வது” ”எத்தனை உயிர்களை இழந்து விட்டோம் இனியாவது எமது உயிரை காப்பாற்றுங்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மக்கள் கலந்து கொண்டனர்.

வாகனேரி பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்கி இதுவரையில் இருபத்தைந்து பேர் மரணமடைந்துள்ளதாகவும், பல காயமடைந்து காணப்பட்டதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் இரவு எட்டு மணியளவில் வாகனேரி பிரதேசத்தினுள் யானை நடமாட்டமே காணப்படுவதுடன், சன நடமாட்டம் எதுவும் இல்லாமல் மக்கள் பயத்தின் மத்தியில் வீட்டினுள் இருக்க நேரிடுவதாகவும் கூறுகின்றனர்.

மேலும், இரவு நேரங்களில் யாரும் வெளிச்சத்தோடு வருகை தந்தால் அவர்களை யானை துரத்துவதாகவும், அவ்வாறு துரத்தியதும் வெளிச்சத்தை விட்டு ஓடினால் அந்த வெளிச்சத்தை தூக்கி கொண்டு யானை வீதியால் வருவதாகவும், மக்கள் பயணிக்கின்றனர் என நினைத்து அதன் அருகே சென்றால் யானை தம்மை தாக்குவதாகவும் மக்கள் தெரிவிப்பதுடன், இதனால் தமது வாகனங்களும் சேதமாக்கப்படுவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் மீன் பிடி தொழிலையும், விவசாயத்தையும் நம்பி வாழ்கின்றனர். ஆனால் யானைகளி; நடமாட்டத்தால் எந்த தொழிலும் செய்ய முடியாமல் பெரும் கஸ்டத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே யானை தொல்லையில் இருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக உடனடியான யானை வேலி அமைத்து மக்களை காப்பாற்ற உரிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் முன்வர வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

-athirvu.in

TAGS: