இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; டிரம்ப், மே கண்டனம்

வாஷிங்டன், சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை கட்டுப்படுத்த அரசுக்கு ஆதரவாக ஈரானிய படைகள் செயல்பட்டு வருகின்றன.

சமீபத்தில் ஈரான் நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது.

இந்நிலையில் ஈரான் அரசு சிரியாவில் இருந்து தனது எதிரி நாடான இஸ்ரேல் மீது ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.  ஏறக்குறைய 20 ஏவுகணைகளை கொண்டு கோலன் பகுதியிலுள்ள இஸ்ரேலிய நிலைகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.  அவற்றில் சில ஏவுகணைகளை இஸ்ரேல் வழிமறித்து அழித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.  இதுபற்றி தொலைபேசி வழியே இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உடன் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார்.

அதன்பின்னர் வெள்ளை மாளிகை வெளிட்டுள்ள செய்தி ஒன்றில், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது ஈரான் அரசு நடத்திய முன்னறிவிக்கப்படாத ஏவுகணை தாக்குதல்களுக்கு இரு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் தாக்குதல் போக்கை சிறந்த முறையில் எப்படி எதிர்கொள்வது என அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

-dailythanthi.com