இந்தோனீசியா: தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் – 11 பேர் பலி

இந்தோனீசியாவின் இரண்டாவது பெரிய நகரான சுரபயாவில் உள்ள மூன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தற்கொலை படையினர் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 11 பேர் இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சில நிமிட இடைவெளியில் நடந்த இந்த தாக்குதல்களில் பல டஜன் மக்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

தாக்குதல் நடந்த ஒரு தேவாலயத்தின் நுழைவாயிலில் குப்பைகள் மற்றும் சிதிலங்கள் சிதறிக் கிடப்பதை தொலைக்காட்சியில் வெளியான படங்கள் காண்பித்துள்ளன.

முஸ்லீம்கள் பெருமான்மையாக வாழும் இந்தோனீசியாவில், அண்மைய மாதங்களில் இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரித்து வருகிறது.

தாக்குதல் நடந்த சுரபயா நகரம்

இந்த குண்டுவெடிப்புகள் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு நடந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களை, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐஎஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட ஜெம்மா அன்ஷுரட் தவ்லா என்ற குழுவால் நடத்தியிருக்கலாம் என்று இந்தோனீசியாவின் உளவுத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. -BBC_Tamil