அமெரிக்கா விலகினாலும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் தொடர்ந்து நீடிப்போம் – ஈரான் உறுதி..

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.

ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்டதாகும்.

இதற்கிடையே, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 9-ம் தேதி அறிவித்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்க பாசம் கொண்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஈரான் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், ரஷியா, சீனா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில மேற்கத்திய நாடுகளும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேற கூடாது என வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இன்று இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவை சந்தித்த ரவுகானி, இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது தர்மநெறிகளுக்கு எதிரான செயல். அமெரிக்கா விலகினாலும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள ஐந்து நாடுகளின் துணையுடன் நாங்கள் தொடர்ந்து நீடிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

-athirvu.in