லைக்காவுடன் விஷாலுக்கு கூட்டு… தமிழ் ராக்கர்ஸுக்கு ஆதரவு… போர்க் கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள்

சென்னை: லைக்கா நிறுவத்துடன் கூட்டு வைத்திருப்பதற்கான காரணத்தை விஷால் கூற வேண்டும் என்றும் தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடித்ததாக கூறும் விஷால் அவர்கள் யார் என்பதையும் சொல்ல வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.

இதுகுறித்து சென்னையில் தயாரிப்பாளர்கள் பாரதிராஜா, ராஜன், ராதாரவி, டி. ராஜேந்தர், ஜே.கே ரித்தீஷ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பாரதிராஜா பேசுகையில் தயாரிப்பாளர்கள் சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது. திரைப்படம் எடுப்பதற்கு சங்கத்தின் அனுமதி தேவையில்லை.திரைத்துறையில் முதலீடு செய்பவர்கள் தமிழர்கள், ஆனால் மற்றவர்களிடம் பிச்சை எடுக்கிறோம். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என பெயர் மாற்றப்பட வேண்டும் என்றார்.

முன்னாள் நிர்வாகி ராதாரவி கூறுகையில் தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடித்ததாக சொல்லும் விஷால் அவர்கள் யார் என சொல்லாதது ஏன். ஓராண்டில் அவர் கொடுத்தவாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பதவி விலகுவேன் என்றுதான் சங்கத்தில் போட்டியிட்டார்.

தயாரிப்பாளர் தங்கம் தேவையா என்பதே கேள்வியாக உள்ளது. சங்கத்தின் விதிமுறைகளில் பல குளறுபடிகள் உள்ளன. தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து சங்கத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். விஷால் பதவி விலக வேண்டும். வாக்குறுதியை மீறி தனது இரும்புத்திரை படத்தை அதிக தியேட்டர்களில் திரையிட்டுள்ளார் விஷால் என்றார் ராதாரவி.

தயாரிப்பாளர், நடிகருமான டி.ராஜேந்தர் கூறுகையில் எங்கே போனது ரூ.7 கோடி வைப்பு நிதி என்பதற்கு விஷால் தரப்பு பதில் சொல்ல முடியுமா. பொதுக் குழுவில் கணக்கு கேட்டதற்கு இன்னும் பதில் வரவில்லை. மூத்தவர்கள் பிரிந்துகிடப்பதான் தான் யார் யாரோ பதவிக்கு வருகிறார்கள்.

ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் போட்டியிடவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத கொடுமை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்தது. லைக்காவுடன் கூட்டு வைத்திருப்பதற்கான காரணத்தை விஷால் கூற வேண்டும். க்யூப் கட்டணத்தை குறைக்க ஸ்டிரைக் செய்தார் விஷால், ஆனால் அந்த கட்டணம் குறைந்ததா என்று டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

-tamil.oneindia.com