தனது விமர்சகர் கைது செய்யப்பட்டதை ஏற்கவில்லை என்கிறார் மகாதிர்

தன்னை விமர்சித்தார் என்பதற்காக ஒருவரைக் கைது செய்த போலிசாரின் நடவடிக்கையைத் தான் ஏற்கவில்லை என்றும், போலிஸ் தரப்பினர் அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பிரதமர் டாக்டர் மகாதிர் கூறியுள்ளார்.

“என்னை விமர்சிப்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுடன் நான் உடன்படவில்லை. இதைப் பற்றி போலிசாருக்கு நான் தெரிவித்திருக்கிறேன். நாடாளுமன்றம் கூடும்போது, இந்தச் சட்டம் மதிப்பாய்வு செய்யப்படும்,” என்று தனது டுவிட்டரில் அவர் பகிர்ந்துள்ளார்.

இதற்கிடையே, வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், புதிய அரசாங்கத்தின் கீழ் இவ்வாறு நடவடிக்கை எடுப்பது ஏற்புடையது அல்ல என்று போலிஸ் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளனர்.