நாடு திரும்பவும், அல்தான்துயா வழக்கு விவரங்களை வெளிப்படுத்தவும் சிரூல் தயார்

ஆஸ்திரேலிய குடிநுழைவு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போலீஸ்காரர், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு உதவும் வகையில், 12 ஆண்டுகளுக்கு முன்னர் அல்தான்துயா ஷாரிபூவின் மரணத்தில் நடந்த உண்மையை வெளிப்படுத்த தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

புதிய மலேசிய அரசாங்கம், அவருக்கு முழு மன்னிப்பு வழங்க வேண்டுமெனும் நிபந்தனையோடு, சிரூல் அஸ்ஹர் உமர் நடந்த உண்மைகளைத் தெரிவிக்கத் தயார் எனக் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் மன்னிப்பு இல்லாமல், தன்னால் விடுதலையாகி, மலேசியா திரும்ப முடியாது என சிரூல், 45, தெரிவித்துள்ளார்.

“புதிய அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக இருக்கிறேன், ஆனால் எனக்கு முழு மன்னிப்பு வழங்க வேண்டும்,” என சிட்னி தடுப்புக் காவல் முகாமில் இருக்கும் சிரூல், மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.

சிரூலின் கருத்துப்படி, மே 9-ம் தேதி 14-வது பொதுத் தேர்தலில், பிஎன் தோல்வியடைந்த பின்னர், அவர் ஓர் அரசியல் குற்றவாளி, சாதாரண குற்றவாளி அல்ல என ஆஸ்திரேலிய மக்களில் பலர் நம்புகின்றனர்.

அவ்வழக்கில் தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டதால், தானும் தனது குடும்பத்தினரும் மக்களின் விமர்சனங்களால் பாதிக்கப்பட்டது தனக்கு வருத்தமளித்ததாக அவர் தெரிவித்தார்.

“அவர்களுக்குத் தெரியாது, அது என் முதல் தவறு.

“சிறப்பு அதிரடி பிரிவில் (யுதிகே) திருடர்கள் மற்றும் பல்வேறு குற்றங்கள் புரிபவர்களைக் கைது செய்வதும் கொலை செய்வதும் என் பணி, தேசியப் பாதுகாப்பிற்காக நான் அனைத்தையும் செய்தேன்.

“அவர்களுக்கு (பொதுமக்கள்) யுதிகே எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியாது, நாங்கள் மேலிடத்து உத்தரவைப் பின்பற்ற வேண்டும்,” என்று அவர் கூறினார்.

ஸ்கோப்பியன் குறித்தும் விசாரிக்கவும்

14-வது பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் முன்னனி தலைவர்களான துன் டாக்டர் மகாதிர், அன்வார் இப்ராஹிம் இருவருக்கும் சிரூல் வாழ்த்துகளைத் தெரிவித்துகொண்டார்.

அவ்விரு தலைவர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரியாக இருந்துள்ளதாக கூறிய சிரூல், தனது வழக்கை மறுவிசாரணை செய்யக்கோரிய பிகேஆர் தலைவருக்கு நன்றியையும் தெரிவித்துகொண்டார்.

“முடிந்தால், மறுவிசாராணைக்கு நான் தயாராக இருக்கிறேன், கடந்த விசாரணை நியாயமற்றது என நான் எண்ணுகிறேன், காரணம், அப்போது நான் வழக்கறிஞர்கள் கூறியதைப் பின்பற்றினேன், அதற்கு எனக்கு இதுதான் கிடைத்தது, இவ்வழக்கின் முக்கிய சாட்சி அழைக்கப்படவே இல்லை,” என்று அவர் கூறினார்.

மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் பெடரல் நீதிமன்றத்தில் அல்தான்துயா வழக்கு விசாரணை நடந்தபோது, கமரூல் ஹிசாம் கமாருடின் மற்றும் ஹஸ்னால் ரெஷுவா மெரிகான் இருவரும் சிரூல் சார்பில் வாதாடினர்.

பெடரல் நீதிமன்றத்தின் தண்டனையைத் தொடர்ந்து, மறுமுறையீட்டிற்குத் தாக்கல் செய்யுமாறு தனது இரண்டு வழக்கறிஞர்களையும் அறிவுருத்தியதாக சிரூல் கூறினார்.

ஆனால், வழக்கறிஞர்கள் அதனைச் செய்யவில்லை, இப்போது மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன என்றார் சிரூல்.

முன்னதாக, 1எம்டிபி ஊழலில் மட்டுமின்றி, நஜிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது நடந்த ஸ்கோர்பியன் நீர்மூழ்கிக் கப்பல் வழக்கிலும் ஹராப்பான் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென, பெடரல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால் ஶ்ரீ ராம் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர், நஜிப் மலேசியாவின் ஆறாவது பிரதமராக பதவியேற்றார்.

இதற்கிடையே, புக்கிட் கெளுகோர் எம்பி ராம் கர்ப்பால் சிங், மங்கோலியப் பெண் அல்தான்துயா கொலைகான காரணத்தையும் விசாரிக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.