அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்

 

இன்று இஸ்தானா நெகாராவில் பேரரசர் சுல்தான் முகம்மட் V இன் முன்நிலையில் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

பதவிப் பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி அரண்மனையின் சிங்காசனா அறையில் நடைபெற்றது. அப்போது பிரதமர் மகாதிர் மற்றும் அவரது துணைவியார் சித்தி ஹம்சா முகமட் அலியும் அங்கிருந்தனர்.

இந்நிகழ்ச்சி மாலை மணி 5.45 க்கு தொடங்கியது.

பிகேஆர் தலைவர் வான் அசிஸா வான் இஸ்மாயில் துணைப் பிரதமராகவும் மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சராகப் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து, முகைதின் யாசின், குவான் எங் மற்றும் முகமட் சாபு ஆகியோர் முறையே உள்துறை, நிதி மற்றும் தற்காப்பு அமைச்சர்களாகப் பதிவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

அவர்களைத் தொடர்ந்து, ஸுரைடா கமாருடின், அந்தோனி லோக் மற்றும் கோபிந்த் சிங் டியோ ஆகியோர் முறையே வீட்டு வசதிகள் மற்றும் உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் தொடர்புகள் மற்றும் பல்லூடக அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.

இறுதியாக, சலாஹுடின் அயுப், மு. குலசேகரன் மற்றும் சுல்கிப்ளி அஹமட் ஆகியோர் முறையே விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை, மனித வளம் மற்றும் சுகாதார அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.

61 ஆண்டுகளுக்கு ஆட்சியிலிருந்த பாரிசான் நேசனலை தோற்கடித்த பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் நாட்டின் ஏழாவது பிரதமராக மே 10 இல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.