அல்தான்துயா வழக்கு மீண்டும் திறக்கப்படுமா? கலந்துபேச வேண்டும், ஐஜிபி

தலைமை காவல்துறை அதிகாரி, முகமட் ஃபுஜி ஹருன், அல்தான்துயா ஷாரிபூ படுகொலை மீதான விசாரணை ஆவணங்கள் மறுபரிசீலனை செய்யப்படுமா எனக் கேட்டதற்கு, முதலில் தனது அதிகாரிகளுடன் விவாதிக்க வேண்டும் என்றார்.

“நான் மீண்டும் பார்க்க வேண்டும், என் அதிகாரிகளுடன் கலந்துபேச வேண்டும்” என்று புத்ராஜெயாவில் இன்று செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறினார். அவருடன் உள்துறை அமைச்சர் முஹைடின் யாசினும் இருந்தார்.

அந்த மங்கோலியப் பெண்ணின் கொலை தொடர்பில், போலிஸார் விசாரணைகளை மேற்கொள்வார்களா எனக் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையாளர் சுக்ரி அப்துல், வாஷிங்டனில் அவர் கண்காணிக்கப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டுகள் பற்றி கேட்டபோது, ஃபுஜி அக்குற்றச்சாட்டுகளைக் கவனிக்க வேண்டும் என்றார்.

“இது பற்றி எனக்கு தெரியாது, ஏனென்றால் அது என் காலத்தில் நடக்கவில்லை, (போலிஸ் தலைவராக இருப்பது) ஆனால், நான் அதைத் தீவிரமாக கவனிப்பேன்,” என்றார் ஃபுஜி.

உள்துறை அமைச்சர் முஹைடின் யாசின், விசாரணை மேற்கொள்ள ஏதுவாக, சுக்ரியைப் போலீஸ் புகார் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

2015-ஆம் ஆண்டில், 1எம்டிபி பணம் பற்றி விசாரிக்கும் போது, தான் பல ‘இடையூறுகளால்’ பாதிக்கப்பட்டதாக, எம்எசிசி-யின் அந்த முன்னாள் துணைத் தலைவர் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.