1எம்டிபி தணிக்கை அறிக்கை ஓஎஸ்ஏ-இன்கீழ் வைக்கப்பட்டது ஒரு தற்காலிக நடவடிக்கையே -அம்ப்ரின்

முன்னாள்  தலைமை  கணக்காய்வாளர்   அம்ப்ரின்    பூவாங்,   1எம்டிபி    தணிக்கை    அறிக்கையை   அதிகாரத்துவ   இரகசிய    சட்டத்தின்கீழ்   வைத்தது   தம்  சொந்த   முடிவாகும்   என்றார்.  ஆனால்,  அது  ஒரு     தற்காலிக    நடவடிக்கையே  என்றாரவர்.

பொதுக்  கணக்குக்குழு (பிஏசி)வும்   1எம்டிபிமீது   ஒரு   விசாரணையை   நடத்திக்கொண்டிருந்ததால்   அதன்  விசாரணை   முடிந்த  பின்னர்     தணிக்கை    அறிக்கையை    அதிகாரத்துவ   இரகசிய   சட்டத்தின்கீழ்   வைத்திருக்க  வேண்டியதில்லை,  பொதுவில்   வெளியிட்டு  விடலாம்    என்று  திட்டமிட்டிருந்ததாக   அம்ப்ரின்   கூறினார்.

தணிக்கை  அறிக்கையை    அதிகாரப்பூர்வ    சட்டத்தின்கீழ்  வைக்கச்  சொல்லி   யாரும்  வெளியிலிருந்து   தமக்கு  அழுத்தம்   கொடுக்கவில்லை   என்றாரவர்.

ஆனால்,  அதைப்  பகிரங்கமாக   வெளியிடக்கூடாது     என்று  முடிவு   செய்தது  பிஏசிதான்   என்று   அவர்  கூறியதாக   மலாய்   மெயில்  இன்று  கூறியது.

“பிஏசி  எங்கள்    அறிக்கையை    அதன்    அறிக்கையுடன்  இணைத்து   வெளியிடும்   என்று   நினைத்தோம்.  ஆனால்,  அவர்கள்  முடிவு   வேறு  மாதிரியாக   இருந்தது”,  என்றாரவர்.

பிறகு    அம்ப்ரின்  “அரசாங்கப்   பாதுகாப்பு    அலுவலகத்தை”த்   தொடர்புகொண்டு   பேசியபோது    அது    அறிக்கை  ஓஎஸ்ஏ-இன்கீழ்   இருப்பதுதான்   நல்லது     என்று   கூறிவிட்டதாம்.

இப்போது  1எம்டிபி  மீதான  விசாரணைக்குத்    தம்மை   யாரும்    அழைக்கவில்லை     என்று  கூறிய   அம்ப்ரின்   அழைத்தால்   ஒத்துழைக்கத்   தயார்   என்றார்.

பிரதமர்   டாக்டர்     மகாதிர்     முகம்மட்     1எம்டிபி  தணிக்கை    அறிக்கை  அதிகாரத்துவ   இரகசியச்   சட்டத்தின்கீழ்  இருக்க    வேண்டியதில்லை    என்று  முடிவு  செய்து   அதன்மீதான  இரகசியக்  காப்பு   முத்திரையை   அகற்றுமாறு  கடந்த     வாரம்   போலீசுக்கு   உத்தரவிட்டார்.