வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: டிரம்ப்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது பேச்சுவார்த்தைக்கான தகுந்த சமயம் அல்ல எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த அந்த பேச்சுவார்த்தை நடைபெறாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

”பெருங்கோபம் மற்றும் திறந்த விரோதத்தின்” அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வடகொரியா குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் ஜூன் 12 அன்று உச்சிமாநாட்டை நடத்துவது பொருத்தமற்றது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் கிம்முக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கிம்மை ‘மற்றொருநாள்’ சந்திக்க மிகவும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

” உங்களுடன் அங்கு உச்சிமாநாட்டில் பங்குபெற நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் சோகம் என்னவெனில் உங்களது சமீபத்திய அறிக்கையில் திறந்த விரோதமும் கோபமும் வெளிப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நான் நீண்டகாலமாக திட்டமிடப்பட்டிருந்த தற்போதைய சந்திப்பில் பங்கேற்பது பொருத்தமானதாக இருக்காது என உணர்கிறேன்” என டிரம்ப் கூறியுள்ளார்.

” உங்களது அணுசக்தி திறன்கள் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள், ஆனால் எங்களுடையது மிகவும் வலிமையானது மேலும் நான் அவற்றை ஒரு போதும் பயன்படுத்துவதற்கான தேவை வரக்கூடாது என கடவுளிடம் வேண்டுகிறேன்” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: டிரம்ப்

முன்னதாக, வட கொரியா லிபியாவை போல முடிந்துவிடக்கூடும் என அமெரிக்க துணைப் பிரதமர் மைக் ஃபென்ஸ் விமர்சித்ததையடுத்து வட கொரிய அதிகாரி சோ சன் ஹுய் அவரது கருத்தை முட்டாள்தனமானது என தெரிவித்துள்ளார்.

வட கொரியா பேச்சுவார்த்தையை நடத்த பிச்சையெடுக்காது என்றும் பேரப்பேச்சு நடத்துவதற்கான ராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால் அணுசக்தி மோதல் நடக்கலாம் எனவும் எச்சரித்திருந்தார் சோ சன் ஹுய்.

யார் இந்தசோ சன்ஹுய்?

கடந்த தசாப்தத்தில் அமெரிக்காவுடனான பல்வேறு பரஸ்பர ராஜீய பேச்சுவார்த்தைகளில் சோ சன் ஹுய் ஈடுபட்டுள்ளார். கிம் ஜாங் உன்னின் உயர்மட்ட உதவியாளர்களில் அவரும் ஒருவர். மேலும், அவரது கருத்து கிம் ஜாங் உன்னின் இசைவுடனேயே வெளிவரும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வட கொரியாவுக்கு லிபியா போல முடிவு இருக்கக்கூடும் என பென்ஸ் வட கொரியாவை எச்சரித்த சில நாட்களுக்கு பிறகு சோ சன் ஹுய் கருத்து வெளியாகியுள்ளது.லிபியாவில் 2011-ல் கிளர்ச்சியாளர்களால் அந்நாட்டின் தலைவர் கடாஃபி கொல்லப்பட்டார்.

என்ன நடந்தது ?

மே10 – டிரம்ப் சிங்கப்பூரில் ஜூன் 12-ல் கிம்மை சந்திப்பதாக தெரிவித்தார்.

மே 12 – சோதனை தளத்தை தகர்க்கவுள்ளதாக வடகொரியா அறிவித்தது

மே 16 – அமெரிக்க தேசிய பாதுகாப்புத்துறையின் ஜான் போல்டன் ” லிபியன் மாதிரி” என வடகொரியா குறித்து கருத்து தெரிவித்ததையடுத்து உச்சிமாநாட்டை ரத்துசெய்யவுள்ளதாக வட கொரியா அச்சுறுத்தியது.

மே 18 – போல்டனிடம் இருந்து விலகி நின்ற டிரம்ப், ’லிபியா மாதிரி’ அணுசக்தி ஒழிப்புக்கு அமெரிக்கா தள்ளவில்லை எனத் தெரிவித்தார்

மே 22 – அமெரிக்காவுக்கு ” சில உறுதியான நிபந்தனைகள்” கிடைக்காதவரை சந்திப்பில் பங்கேற்காது என டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். -BBC_Tamil