நான் இழைத்த தவறை இனியும் இழக்கத் தயாரில்லை; சேனாதிராசா..

கடந்த மாகாண சபை தேர்தலில் நான் இழைத்த தவறை இனியும் இழக்கத் தயாரில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நேற்று நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர் கூட்டத்தில் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் முதலவர் வேட்பாளராக போட்டியிடுவதை பரிசீலிக்கத் தயாரெனவும் கடந்த மாகாண சபைத் தேர்தலில் தான் இழைத்த தவறை அடுத்த மாகாண சபைத் தேர்தலில் இழைக்கத் தயாரில்லை எனவும் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் கூட்டம் கொழும்பில் நேற்று (06.06.2018) நடைபெற்றது. இதன் போது பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டிருந்த நிலையில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலையே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இக் கூட்டத்தின் போது கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இதில் கட்சிகளுக்கிடையிலான ஆசனப் பங்கீடுகளில் இறுதி நேரத்தில் ஏற்றபட்ட முரண்பாடுகளும் தேர்தல் பின்னடைவுக்கான காரணங்களில் ஒன்றாக எடுத்துக் கூறப்பட்டிருந்தது. ஆகவே அடுத்து வரும் தேர்தல்களில் வேட்பாளர்கள் மற்றும் ஆசனங்கள் என்பன தொடர்பில் முன்னதாகவே முடிவுகளை எடுக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் அடுத்து நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.

அதில் குறிப்பாக மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளராக நான் என்னை போட்டியிடக் கோரினால் அதனைப் பரிசீலிக்கலாமென ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றேன். அவ்வாறு கோரப்படுமிடத்தே அது தொடர்பில் முடிவெடுப்பதுடன் அந்த முடிவானது கடந்த காலங்களில் இழைத்த தவறைப் போன்றதாக இருக்கவே இருக்காது.

ஏனெனில் கடந்த மாகாண தேர்தலில் நான் இழைத்த தவறை இனியும் இழக்கத் தயாரில்லை எனவும் பங்காளிக் கட்சிகள் மத்தியில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆயினும் மாவை சேனாதிராசா தன்னுடைய நிலைப்பாட்டைஇவ்வாறு தெரிவித்திருக்கின்ற போதும் இது குறித்து எந்த வித இறுதி முடிவுகளும் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை எனவும் தெரியவருகின்றது.

-athirvu.in

TAGS: