சென்னை – சேலம் 8 வழி சாலையை எதிர்க்கும் மக்களை அதிகாலை வீடு புகுந்து கைது செய்த போலீஸ்

சேலம் : சென்னை – சேலம் 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு சேலத்தில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

சேலம் – சென்னை இடையே பசுமை வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக இந்த சாலை சென்னை வந்தடையும்படி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை அமைக்கும் பணிகளுக்காக 7 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால், விவசாய நிலங்கள், வனப்பகுதி, ஆறுகள் பாதிக்கப்படும் என்றும், 150 கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக இந்த திட்டத்திற்கு சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களின் கிராமங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் பெரும் போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்தது.

இந்நிலையில், ஆச்சாங்கூட்டப்பட்டி, சேரிக்காடு, கொப்பனூர் உள்ளிட்ட பகுதிகள் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த 6 விவசாயிகளை இன்று அதிகாலை சேலம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த காவல் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகளின் உறவினர்கள் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தின் முன்பு குவிந்து உள்ளனர். மேலும், இந்த கைதைக் கண்டித்து போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: