தமிழர் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவம் முன்னெடுத்துள்ள திட்டம்

தமிழர் தாயகத்தின் வட கிழக்கில் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில் அவர்களை தொடர்ந்தும் அங்கேயே வைத்திருப்பதற்காக ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி பல தந்திரோபய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவத்தின் தற்போதைய தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நட்புபாராட்டக்கூடியவர் என அடையாளப்படுத்திய முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடக்கின் முன்னேற்றத்திற்கு இராணுவம் தடையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் யாழ்ப்பாணத்திற்கான கிளை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுண்டிக்குளியில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான வர்த்தகர்களும், பொருளியல் நிபுணர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர், சர்வதேச சந்தைக்கான உற்பத்திகளை வட மாகாணம் தயாரிப்பதற்கு இராணுவம் தடையாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.

( முதலமைச்சர்: “ இராணுவம் தொடர்ந்தும் எமது பகுதிகளில் அதிகளவில் நிலைகொண்டு இருப்பதற்காக எமது நட்புப்பராட்டக்கூடிய இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தந்திரோபயமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். பயன்தரும் மண்ணைக்கொண்ட ஏராளமான நிலங்கள், எமது மக்களின் தனிப்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்கள், எமது மக்களின் வீட்டுத் தோட்டங்கள், விவசாய நிலங்கள் மாத்திரமன்றி உணவகங்கள், விடுதிகளையும் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒன்பது வருடங்கள் கடந்தும், தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பதற்காக அவர்கள் முயற்சித்து வருகின்றனர். எமது மக்களுக்கு உதவும் வகையில் பொது நிகழ்வுகளிலும் கலந்துகொள்கின்றனர். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் எமது மக்களே முன்வந்து இராணுவம் வெளியேறக்கூடாது என்று கூற வேண்டும் என்பதையே இராணுவம் எதிர்பார்க்கின்றது. )

எவ்வாறாயினும் தமிழ் மக்களின் வாழ்வாதரங்களுடன் தொடர்புடைய காணிகள் மற்றும் வளங்களை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருப்பதற்கு எதிராக மக்கள் மத்தியிலேயே கடும் எதிர்ப்புக்களும் எழுந்துள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் தென்பகுதியை சேர்ந்த சிங்கள மீனவர்களுக்கு வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் கடல்வளத்தை சுரண்ட அனுமதி அளித்துள்ளதன் மூலம் மோதல் ஏற்படும் ஆபத்தும் அங்கு ஏற்பட்டிருப்பதாகவும் வட மாகாண முதலமைச்சர் எச்சரித்தார்.

சமாதானம் நிலவும் காலப்பகுதியில் தொடர்ந்தும் வடக்கில் ஏராளமான இராணுவத்தை வைத்திருப்பதனால் அரசாங்கமும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், இதற்குத்தீர்வாக ஒன்பது மாகாணங்களுக்கம் சரி சமமாக இராணுவப் படையணிகளை பகிர வேண்டும் என்றும் யோசனை முன்வைத்துள்ளார்.

அதேவேளை தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை வடக்கில் வர்த்தக மற்றும் தொழிற்சாலை நடவடிக்கைகள் பாரிய முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

( முதலமைச்சர்: “ பிரிவிணைவாதத்திற்காக குரல்கொடுபதில் இருந்து தமழ் சமூகம் தற்போது விலகியிருக்கின்றது. இதனால் வடக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த நாட்டையும் அபிவிருத்தி செய்வதற்கு ஒத்துழைக்கக்கூடிய சமஷ்டி ஆட்சி முறையை உள்ளடக்கிய அரசியல் யாப்பொன்றை தயாரிப்பதற்கான தமிழ் மக்களின் ஆதரவை நாம் ஏற்கனவே பெற்றுக்கொண்டுள்ளோம். )

சமஷ்டி அடிப்படையிலான அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகள் வெற்றிபெற்று நடைமுறைப்படுத்தப்படுமானால் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் சமூகம் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் வட மாகாண முதலமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

-athirvu.in

TAGS: