அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் இதயங்கனிந்த நோன்புப் பெருநாள் வாழ்த்து கூறுகிறார் சேவியர்

  • டாக்டர் சேவியர் ஜெயக்குமார், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர்,தேசிய உதவித் தலைவர் கெஅடிலான்

 புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லீம் பெருமக்களுக்கும் எனது இதயங்கனிந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரமலான் மாதத்தை மிகவும் தூய்மையான, புனிதமான மாதமாக முஸ்லீம் மக்கள் கருதுகின்றனர். இம்மாதத்தில் அவர்கள் விரும்பி, உண்ணும் உணவுகளுக்கு மட்டும் நோன்பு இருப்பதில்ல. மாறாக உணர்வுகளையும் சிந்தனைகளையும் கூடத் தூய்மையாக வைத்து, ஏழைகளுக்கு இரங்கிச் சதா இறைஞானத்துடன் இருந்து புனிதத்தைத் தேடுவதாக இஸ்லாமிய இதிகாசங்கள் கூறுகின்றன.

 

கடந்த ஆண்டு எனது நோன்புப்பெருநாள் வாழ்த்தில் ‘’மூத்தவர்கள் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நாட்டின் நலன் போற்றி காக்கப்பட வேண்டும், அது எல்லை பாதுகாப்பு மட்டுமின்றி, நாட்டின் வளம் சார்ந்த தொழில், எரிபொருள், நீர், போக்குவரத்து நிறுவன, சொத்து மேம்பாட்டு பாதுகாப்பும் அதில் அடங்கும். நாடு அன்னியக்கடன் வலையில் சிக்கிவிடவும் கூடாது. அப்படிப்பட்ட செயல் நாட்டின் வளங்களை வெளியார்களிடம் இழக்க வழி வகுத்துவிடும் என்று எச்சரித்திருந்தோம்.”

 

இம்முறை, அந்த எச்சரிகையை ஏற்று, நாட்டில் அரசியல் மாற்றத்திற்கு வித்திட, தேசத்தைக் காப்பாற்ற, மலேசியாவைக் கௌரவப்படுத்த இஸ்லாமியச் சகோதரர்கள் செய்த அர்ப்பணிப்பு  மகத்தானது. ஆக, மலேசியர்களான நாம், மார்க்கத்தால்  வேறு பட்டிருந்தாலும் எல்லா மதங்களின் போதனைகளும் நமக்குத் தவறாமல் உணர்த்துவது மனக்கட்டுப்பாடு, நேர்மை, தர்மம், தூய்மை, நீதி என்ற புனிதங்களையே, என்பதை அனைவரும் உலகுக்கு உணர்த்தி விட்டோம்

 

நீண்ட நாட்களாக மலேசியர்கள் ஒற்றுமையாக அனைத்துச் சமயத் திருநாள்களை மட்டுமே உறவாடிப் பண்டிகைகளாகக் கொண்டாடுவதில் சிறந்தவர்கள் என்பதனையும் தாண்டி, இம்முறை நாட்டைத் தூய்மை படுத்திய சந்தோஷத்திலும் புனிதமான ரமலான் திருநாளை இரட்டிப்பு மகிழ்ச்சியில் கொண்டாடுவோம்.  மலேசியர்கள் அனைவரும் அதில் ஒன்றுபட்டே திளைத்திருக்கிறோம் என்பதனை உலகுக்கு உணர்த்துவோம்.

 

நம் நாட்டில் நிலவும் இந்தத் தனித்தன்மையை நாம் தொடர்ந்து போற்றி வளர்ப்பதுடன் நமது எதிர்காலச் சந்ததியினருக்கும், போதித்துச் சமயங்களிடையே நிலவும்  ஒற்றுமை மேலும் ஓங்கி வளரப் பாடுபடவேண்டும்.  எல்லா மக்களின் ஆசியும், அன்பும் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லீம் பெருமக்களுக்கும் கிட்ட இறைவனைப் பிராத்திக்கிறோம்.