மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு!

பசுமைவழிச்சாலை குறித்து வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் சேலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தும்பிபாடி கிராமத்திற்கு சென்ற நடிகர் மன்சூர்அலிகான், விமானநிலைய விரிவாக்கத்திற்கு எடுக்கப்படும் நிலங்களை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 8 வழிச்சாலை அமைத்தால் 8 பேர் கையை வெட்டுவேன் என்று கருத்து தெரிவித்தார்.

அவரது இந்தப்பேச்சு வன்முறையை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை சூளைமேட்டில் இருந்த மன்சூர் அலிகானை சேலம் காவல்துறையினர் கைதுசெய்து, ஓமலூர் உட்கோட்டத்தில் உள்ள தீவட்டிபட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்மீது கொலை மிரட்டல், அரசுக்கு எதிராக மக்களை தூண்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

-athirvu.in