அமெரிக்காவில் 2 ஆயிரம் குழந்தைகள், பெற்றோரிடம் இருந்து பிரிப்பு..

டிரம்ப் அரசின் நடவடிக்கையால் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி, மே 31-ந் தேதி வரையிலான 6 வார காலத்தில் 1,995 குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவுக்கு மெக்சிகோவில் இருந்து சட்ட விரோதமாக எல்லை தாண்டி வருகிறவர்கள் மீது டிரம்ப் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, பெரியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்களுடன் வருகிற குழந்தைகள், பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து பிரிக்கப்படுகின்றனர். அவர்கள், ஆதரவற்றவர்களாக வகைப்படுத்துப்படுகின்றனர். இந்த குழந்தைகள் அமெரிக்க அரசின் சுகாதாரத்துறை மற்றும் மனிதாபிமான சேவைகள் துறையின் பராமரிப்புக்கு மாற்றப்பட்டு, அரசு தடுப்பு முகாம்களுக்கும், குழந்தை வளர்ப்பு மையங்களுக்கும் மாற்றப்படுகின்றனர்.

அந்த வகையில் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி, மே 31-ந் தேதி வரையிலான 6 வார காலத்தில் 1,995 குழந்தைகள் இப்படி பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நடவடிக்கையை அமெரிக்கா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. சபை கேட்டுக்கொண்டு உள்ளது.

ஆனால் அமெரிக்க அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ். இதற்கு கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் புனித பவுலடியார் ரோமாபுரியாருக்கு எழுதிய நிருபத்தில் (கடிதத்தில்), அரசின் சட்டத்துக்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும் என்று கூறி இருப்பதை சுட்டிக்காட்டி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பெற்றோரிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கிற பரிதாபத்தை டிரம்பின் குடியரசு கட்சியினர் சிலர் ஆதரிக்கின்றனர். மற்றபடி அனைவரும் எதிர்க்கின்றனர்.

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பால் ரேயான், இந்த உத்தியை நான் விரும்பவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

-athirvu.in