நடிகர் என்பதை விட ‘‘மாணவர்கள் கல்விக்கு உதவுவதை உயர்வாக பார்க்கிறேன்’’ நடிகர் சூர்யா பேச்சு

நடிகர் சூர்யா விழாவில் கலந்து கொண்டு 21 மாணவ–மாணவிகளுக்கு ரூ.2 லட்சத்து ஐந்தாயிரம் பரிசு வழங்கினார்.  திண்டிவனம் தாய்தமிழ் பள்ளிக்கு ரூ.1 லட்சமும், ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் வாழை இயக்கத்திற்கு 1 லட்சமும் வழங்கப்பட்டது.

விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது:–

கல்வி, ஒழுக்கம் சரியாக இருந்தால் வாழ்க்கை தவறாக போகாது. அகரம் மூலம் கல்வி உதவி பெறும் மாணவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு 2,500 ஆக உயர்ந்து இருக்கிறது. விளையாட்டு மற்றும் அறிவியல் சார்ந்து அடுத்தாண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் என்பதை விட அகரம் மூலம் மாணவர்கள் கல்விக்கு உதவுவதை பல மடங்கு உயர்வாக பார்க்கிறேன். அதில்தான் நிறைவு கிடைக்கிறது. வீட்டில் அப்பா, அம்மாவுக்கு, குழந்தைகளுக்கு தேவையான வி‌ஷயங்கள் எல்லாம் செய்தாகி விட்டது. இனிமேல் செய்கிற ஒவ்வொரு வி‌ஷயமும் அகரமுக்காக மட்டுமே இருக்கணும் என்பது என் ஆசை.

கிராமப்புறத்திலுள்ள மாணவர்களுக்கு இன்னும் நிறைய உதவி தேவைப்படுகிறது. நகர்ப்புறத்தில், வெளிநாடுகளில் இருப்பவர்கள் கிராமப்புறத்திலுள்ள பள்ளிகளுக்கு அவர்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவி செய்தாலே பெரிய மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்கள் நடைபெற்றால், ஏற்றத்தாழ்வுகள் இருக்காது.

இவ்வாறு சூர்யா பேசினார்.

நடிகர் சிவகுமார் பேசும்போது, ‘‘கல்வி, ஒழுக்கம் ஆகிய இரண்டுமே நம்மை காப்பாற்றும். இதனை மாணவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

நடிகர் சிவகுமார் மகள் பிருந்தா இறைவணக்கம் பாடினார். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வரவேற்புரை நிகழ்த்தினார்.

-dailythanthi.com