வெளிநாட்டில் இருந்து காசு போய் சுமந்திரனை கொல்ல திட்டம்: சிங்கள புலனாய்வு சொல்லும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்யும் நோக்கில் முன்னாள் போராளிகள் சிலர், புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரால் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக நான்கு தினங்களுக்கு முன்னர் இராணுவ புலனாய்வுப் பிரிவு, பொலிஸாருக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்திருந்தது.இதுகுறித்து, பொலிஸ் புலனாய்வுப் பிரிவு தயார்படுத்தப்பட்டது. தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை மற்றும் கொடியுடன் கிளைமோர்க் குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்யும் நோக்குடன் அவை கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார், முச்சக்கர வண்டியை வழிமறித்து சோதனையிட்ட போது, அதன் சாரதியும் மற்றொருவரும் தப்பியோடிவிட்டனர்.

முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது, அதிலிருந்து 20 கிலோகிராம் எடையுடைய கிளைமோர் குண்டு, அதனை மறைந்திருந்து இயக்கும் தொலையியக்கி கருவிகள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை மற்றும் புலிக் கொடி என்பன மீட்கப்பட்டதாக இன்று காலை பொலிஸார் தெரிவித்திருந்தனர். முச்சக்கரவண்டி சோதனை நடத்தப்பட்ட பிரதேசத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் உயர்மட்டம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, மதியமளவில் இன்னொருவரும் கைதாகினார்.கைது செய்யப்பட்ட இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் எனவும், தப்பியோடியவரும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.நெடுங்கேணிப் பகுதியிலிருந்து ஒட்டுசுட்டான் பகுதி வழியாக புதுக்குடியிருப்பு வீதியில் பயணித்த போதே முச்சக்கர வண்டி பொலிஸாரால் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. ஆனார் அவர்களின் நோக்கம் என்வென்று தெரியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

-athirvu.in

TAGS: