வேதமூர்த்தியால் புதிய புரட்சியை உண்டாக்க முடியுமா?

பொன்னன்: மலேசியா திரும்பும் வேதமூர்த்தியால் புதிய புரட்சியை உண்டாக்க முடியுமா?

கோமாளி: பொன்னா, அலை எப்பொழுது ஓய்வது; தலை எப்பொழுது முழுகுவது என்றில்லாமல் தக்க தருணத்தில் நாடு திரும்பும் வேதமூர்த்தியின் செயல் பாரட்டத்தக்கது.

இண்ட்ராப் பேரணி முடிந்த அடுத்த நாளே லண்டன் பயணமான அவரின் கடந்த 56 மாத அயல்நாட்டு நடவடிக்கைகள் மலேசிய இந்தியர்களின் பூர்வீக பங்களிப்பை நியாயப்படுத்தி நடைமுறையில் அவர்கள் அந்நியப்படுத்தி உள்ளதை பரப்புரையாக கொண்டிருந்தன.

ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டு செல்லும் போது இனவாத அரசியலை அமைத்ததோடு அதில் பெரும்பான்மை இனத்திற்கான ஆதிக்கச் சூழலை உண்டாக்கியதுதான் நமது ஏழ்மைக்கும் நாம் இரண்டாம் தர சமூகமாக வாழ்வதற்கும் காரணம் என்ற வகையில் ஒரு வரலாற்றுக் கடனை உருவாக்கி அதை நஷ்ட ஈடாக கோரி பிரிட்டிஷ் அரசின் மீது வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு மிகவும் முக்கியமானதாக கோமாளி கருதுகிறேன். காரணம், இது மலேசியாவின் இனவாதம் கொண்ட அரசமைப்பையும்  அதனால் எப்படி ஒரு குறிப்பிட்ட குழுவினரே நாட்டை தங்கள் வசம் வைத்துள்ளனர் என்பதையும் அப்பலப்படுதுகிறது.

இதை விவேகமாக மலேசியர்கள் (எல்லா இனங்களும்) கையாண்டால் அதன் தாக்கம் ஒரு நல்ல நியாயமான மலேசியாவை உருவாக்கும் தன்மை கொண்டதாக அமையும்.

இதனால் புரட்சி உண்டாகும் நிலை உள்ளதாக தெரியவில்லை. சிந்தனை எழுச்சியாவது உண்டாக வேண்டும். மேலும், இதை இந்தியர்களின் பிரச்சனையாக மட்டுமே பார்த்தால் அதன் தாக்கம் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதாக மாறிவிடும்.

பொன்னா, இவரின் வருகையால் இந்தியர்களின் ஆதரவு கட்சி அரசியல் நிலையில் எப்படி இருக்கும் என் கேட்டால், எனது பதில், இவரின் நடவடிக்கை தேர்தல் சார்பற்ற வகையில், கொள்கை வடிவமைப்புக்கு வித்திடும் சூழலை உருவாக்க வேண்டும்.

நமக்கு தேவை ஆட்சி மாற்றமல்ல, அரசியல் மாற்றம்.