மந்திரி புசார்: KTMBக்குக் கடனாகக் கொடுக்கப்பட்ட நிலம் விற்பனைக்கு அல்ல

KTMB என்ற Keretapi Tanah Melayu Bhdக்கு கொடுக்கப்பட்ட நிலம் விற்பனைக்கு அல்ல என சிலாங்கூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.

KTMB விரைவில் தனியார் மயப்படுத்தப்படும் என்ற தகவல்கள் வெளி வந்துள்ளதைத் தொடர்ந்து மாநில மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது ஒரு ‘நினைவூட்டல்’ என அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“ரயில் சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஆனால் கூட்டரசு நில ஆணைக் குழு அல்லது ரயில் சொத்து வாரியத்துக்கு மாற்றி விடப்படாத அல்லது ஒதுக்கி வைக்கப்படாத,  எந்த காலி அல்லது பயன்படுத்தப்படும் நிலமும் மாநில அரசாங்க நிலம் என நினைவூட்டப்படுகின்றது,” என காலித் சொன்னார்.

KTMB -யைத் தனியார் மயமாக்குவது பற்றிக் கூட்டரசு அரசாங்கம் தற்போது செல்வந்தரான சையட் மொக்தார் அல் புஹாரியின் கட்டுக்குள் இருக்கும் எம்எம்சி என்னும் Malaysian Mining Corporation Bhd உடன் பேச்சு நடத்தி வருகின்றது.

“மாநில அரசாங்கம் அந்த விஷயம் குறித்து கவலை அடைந்துள்ளது. ஏனெனில் நேரடிப் பேச்சுக்கள் வழி அந்தப் பேரம் நடைபெறுவதாகத் தெரிகிறது. அந்த சூழ்நிலையில் பொதுச் சொத்துக்கள் தனியார் நிறுவனத்திடம் சென்று விடக் கூடும் அபாயம் நிலவுகிறது,” என்றார் காலித்.

மலாயா ரயில்வே ஊழியர் சங்கம் அந்தத் தனியார் மயத் திட்டத்தை எதிர்க்கிறது. அந்தத் திட்டம் தனது உறுப்பினர்களுக்கு சிரமங்களைக் கொண்டு வரும் என அது எச்சரித்துள்ளது.

 

TAGS: