ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் வழக்கு எண் 18/9, ஏழாம் அறிவு!!

சென்னை: இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் இந்தியப் படங்களின் பட்டியல் வழக்கு எண் 18/9 மற்றும் ஏழாம் அறிவு ஆகிய இரு படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய திரைப்பட சம்மேளனம் (FFI) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

உலக திரைப்பட விருதுகளில் மிக உயர்வானதாகக் கருதப்படுகிறது ஆஸ்கர் விருது. பலர் தங்களுக்கு இந்த விருது மீது நம்பிக்கை இல்லை என்றெல்லாம் சொன்னாலும், அவர்களின் இறுதி இலக்கு, நமக்கு ஒரு ஆஸ்கர் கிடைத்துவிடாதா என்பதில்தான் இருக்கும்.

ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு படங்கள், சிறந்த வெளிநாட்டு மொழி பட பிரிவின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 10 படங்களை இந்திய திரைப்பட சம்மேளனம் தேர்வு செய்துள்ளது.

இவற்றில் வழக்கு எண் 18/9 மற்றும் 7 ஆம் அறிவு ஆகியவை இடம்பெற்றுள்ளன. 16 பேர் கொண்ட நடுவர் குழு இந்த தேர்வை அறிவித்துள்ளது.

வழக்கு எண் 18/9-ல் முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருந்தனர். லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் தயாரிக்க, பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது இந்தப் படம்.

7-ஆம் அறிவு படத்தை இயக்கியவர் ஏ ஆர் முருகதாஸ். உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருந்தார். சூர்யா-ஸ்ருதிஹாஸன் நடித்திருந்தனர். நல்ல வசூல், தமிழரின் பெருமையை உணர்த்திய படம் என்று சொல்லப்பட்டாலும், கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து இந்தப் படம்.

இந்த இரு படங்கள் தவிர, இந்தியிலிருந்து கஹானி, கேங்ஸ் ஆப் வஸிப்பூர், பாங் சிங் டோமர், தி டர்ட்டி பிக்சர் மற்றும் பார்பி ஆகி படங்களும் தேர்வாகியுள்ளன.