என்எப்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாமா என்று அரசாங்கம் ஆலோசனை

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசனுக்கு (என்எப்சி) எதிராக சிவில் வழக்கு தொடுத்து ரிம 250 மில்லியன் கடனைத் திரும்பப் பெறுவது பற்றி அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

“நிதி அமைச்சு, விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சு, சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் ஆகியவை பொருத்தமான நடவடிக்கை எடுப்பது பற்றிப் பல தடவை கூடிப்பேசியுள்ளன….”, என்று 2011 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கூறுகிறது.

ஃபீட்லோட் மையம் அதன் இலக்குகளை அடையவில்லை என்பதை முதன்முதலில் கவனத்துக் கொண்டு வந்தது 2010 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை.

அதன்பின் பிகேஆர், என்எப்சிக்கு எளிய நிபந்தனைகளில் கொடுக்கப்பட்ட கடனை அந்நிறுவனம் அதன் சகோதர நிறுவனங்களுக்குத் திருப்பி விட்டு அவை அப்பணத்தை ஆடம்பர கொண்டோமினியம்களிலும் உணவகத்திலும் சிங்கப்பூரில் ஒரு பேரங்காடியிலும் முதலீடு செய்த விவகாரத்தை அம்பலப்படுத்தியது.

அதற்கு எதிர்வினையாற்றிய என்எப்சி, அதன் அறுப்புக்கூடம் கட்டி முடிப்பதற்குக் காத்திருக்கும் வேளையில் ஆதாயம் பெறுவதற்காக கையில் உள்ள பணத்தைச் சொத்துகளில் முதலீடு செய்ததாகக் கூறியது.

இப்போது என்எப்சி தலைவர் முகம்மட் சாலேமீது நம்பிக்கை மோசடி செய்ததாகவும் 1965 நிறுவனச் சட்டத்தை மீறியதாகவும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

TAGS: