காருக்குள் புகைப்பிடிப்பதால் அனைவருக்கும் ஆபத்து; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

காருக்குள் அமர்ந்து புகைப்படிக்கும்போது உள்ளிருக்கின்ற காற்றில் நச்சுப் பொருட்களின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக உள்ளதாக என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

காரின் ஜன்னல் கண்ணாடிகளை திறந்து வைத்துக்கொண்டு புகை பிடித்தாலும், காரில் குளிரூட்டியை இயக்கிக் கொண்டு புகைபிடித்தாலும்கூட நச்சுப் பொருட்கள் அதிகமாகவே இருப்பதாக அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

காரின் முன்னிருக்கையில் அமர்ந்து ஒருவர் புகைக்கும்போது பின்னால் அமர்ந்திருக்குக்கக் கூடியவர்களை இந்த நச்சுப் பொருட்கள் பாதிக்கும் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

புகைக்கும்போது காருக்குள் காற்றில் நச்சுப்பொருட்களை அளவை 85 கார்ப் பயணங்களில் கணக்கிட்டு ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக டொபாக்கோ கண்ட்ரோல் ஜர்னல் என்ற புகைப்பழக்க ஒழிப்பு விழிப்புணர்வு சஞ்சிகை கூறுகிறது.

காருக்குள் அமர்ந்து புகைபிடிப்பதற்கு தடையைக் கொண்டுவர வேண்டும் என பிரிட்டிஷ் மருத்துவ கழகம் விரும்புகிறது.

 

குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு

“காருக்குள் புகைப்பிடிப்பவர்களால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் பின்னால் அமர்ந்திருக்கின்ற குழந்தைகள்தான். ஏனென்றால் குழந்தைகள் ஒரு நிமிடத்தில் அதிக தடவை மூச்சை உள்ளிழுத்து வெளியில் விடுபவர்கள் ஆவர், மேலும் அவர்களது நோய் எதிர்ப்பு கட்டமைப்பு முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. எனவே மற்றவர்கள் விடுகின்ற புகையை சுவாசிப்பதால் இவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்பு அதிகம்”, என அபர்டீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஷான் செம்பிள் கூறுகின்றார்.

இதேவேளை, 20000 இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் புகைப்பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின் அறிவாற்றல் குறைவாக இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மாரடைப்பு, புற்றுநோய், ஆண்மைக் குறைவு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரிந்த விசயம். ஆனால் மனைவிக்கு நுரையீரல் புற்று நோய், இதய நோய் போன்றவற்றையும், குழந்தைகளுக்கு காது கோளாறு போன்ற நோய்களையும் பரப்புகின்றனர்.

வேலையில் டென்சன் ஏற்பட்டால் புகையை நாடாமல் நல்ல இசையை ரசிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.