மலாய் பக்காத்தான் எம்பிகள் சொத்தைகள் என்கிறார் அமைச்சர்

பக்காத்தான் ரக்யாட் நாடாளுமன்றத்தில் மலாய்க்கார எம்பிகளைக் கூடுதலாக பெற்றிருக்கலாம் ஆனால், அவர்கள் எல்லாருமே கருத்தைச் சொல்வதில் திறன் பெற்றவர்கள் என்றோ  வாதம் செய்வதில் வல்லவர்கள் என்றோ சொல்லவியலாது என்று கிளந்தான் அம்னோ தொடர்புத் தலைவரும் அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான முஸ்தபா முகம்மட் கூறுகிறார்.

“பக்காத்தானில் பலர் முகத்தைக் காட்ட மட்டுமே நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள்.  அவர்களிடம் மலாய்க்கார எம்பிகள் நிறைய இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எண்ணிக்கை அதிகம் இருந்து என்ன… கருத்தைச் சரியாக எடுத்துச் சொல்லத் தெரிய வேண்டாமா”, என்று அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சருமான முஸ்தபா குறிப்பிட்டதாக இன்றைய சினார் ஹராபான் கூறியுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அம்னோவின் மலாய்க்கார எம்பிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு அக்கட்சியில் மலாய்க்காரர்களுக்காக போராடுவதில் வேகம் குறைந்து விட்டதுதான் காரணம் என்று கூறப்படுவதை அவர் மறுத்தார்.

அம்னோ, மலாய்க்காரர்களின் நலனுக்காக எப்போதும் போராடி வந்துள்ளது, தொடர்ந்து போராடும் என்றாரவர்.

பக்காத்தானின் முயற்சியால் நாடாளுமன்றத்தில் மலாய்க்கார எம்பிகளின் எண்ணிக்கை கூடியுள்ளதாக பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு குறிப்பிட்டதற்கு எதிர்வினையாக முஸ்தபா அவ்வாறு கூறினார்.

TAGS: