காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு

karunanithiமுன்னாள் இந்திய மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இல்ல திருமண விழா, சென்னையில் இன்று நடைபெறுகிறது. காங்., கூட்டணியை விட்டு, தி.மு.க., வெளியேறி, நீண்ட இடைவெளிக்கு பின், காங்., முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் திருமண விழாவில், தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்பதால் கூட்டணியை புதுப்பிப்பதற்கு அச்சாரம் போடப்படுகிறது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த திருமணத்தை, கருணாநிதி தலைமை வகித்து நடத்தி வைக்கிறார். மன்மோகன் சிங், சோனியா, ஞானதேசிகன், சிதம்பரம், வாசன் போன்ற தலைவர்களின் உருவப்படங்களுடன் கருணாநிதியின் உருவப்படத்துடன் வரவேற்பு பேனர்கள் சென்னை நகரில் வைக்கப்பட்டுள்ளன.

அறிவாலயம், சத்தியமூர்த்தி பவனை சுற்றி சோனியா கருணாநிதி உருவப் படங்கள் கொண்ட போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க. 5 இடங்களில் போட்டியிடுகிறது. 6 வது சீட்டை கைப்பற்ற, தி.மு.க., போட்டியிட்டால் தே.மு.தி.க. காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆதரிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு விடை அளிக்கும் வகையில், திருமண விழாவில் கருணாநிதி, தன் பேச்சு மூலம் ராஜ்யசபா தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும், திருமண விழாவிற்கு தலைமை வகிக்கும் கருணாநிதியுடன், டில்லியிலிருந்து வருகை தரும் காங்., தலைவர்கள், தமிழக காங்., கோஷ்டி தலைவர்களும் கைகோர்ப்பதால், இந்த நிகழ்வு, திருமண மேடையில், அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி, தி.மு.க.- காங்., கூட்டணியை புதுப்பிப்பதற்கு, அச்சாரமாக அமையும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா., சபையில், இலங்கை தமிழர்கள் பிரச்னை தொடர்பாக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை மாற்றி அமைக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தை மையப்படுத்தி, மத்திய அரசை விட்டு தி.மு.க., வெளியேறியது.

TAGS: