ஆப்கானிஸ்தானில் மனித குண்டு தாக்குதலுக்கு 20 பேர் பலி

காபூல் : ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைக்கு எதிராக தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கிழக்கு பகுதியில் கோஸ்ட் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தை தொகுதியில் நேட்டோ படை வீரர்கள் நேற்று காலை 8.30 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலை படை தீவிரவாதி பொதுமக்கள் கூட்டத்துக்குள் புகுந்தான்.

அவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தான். இதில் 20 பேர் உடல் சிதறி பலியாகினர். அவர்கள் 3 பேர் நேட்டோ படை வீரர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளரும் அடங்குவர்.

இவர்கள் தவிர ஆப்கானிஸ்தானை சேர்ந்த 6 காவல்துறையினரும், பொதுமக்கள் 10 பேரும் உயிரிழந்தனர். மேலும் 62 பேர் காயம் அடைந்தனர். இந்த தகவலை கோஸ்ட மாகான கவர்னரின் செய்தி தொடர்பாளர் பர்யலாஸ் ரவான் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.