உலகிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தீவிரமடைந்துள்ளது: அமெரிக்கா

வடகொரியா நேற்று ஜப்பான் கடல் மீது மேற்கொண்ட ஐ சி பி எம் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை தொடர்ந்து அடுத்ததாக அலாஸ்காவிற்குகூட ஏவுகணை ஒன்றை ஏவ முடியும் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

எனினும், இந்த ஏவுகணையால் அதன் இலக்கை துல்லியமாக தாக்க முடியாது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஜப்பான் கடல் மீது நடத்தப்பட்ட சோதனைக்கு பதிலடி தரும் விதமாக, அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டாக இணைந்து இலக்கை துல்லியமாக சுடும் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதாக பென்டகன் பேச்சாளர் டேனா வைட் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு சபையில் அவசர கூட்டம் ஒன்றை நடத்த அமெரிக்க கேட்டுக் கொண்டுள்ளது.

வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.

‘கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்திருப்பதன் மூலம் அமெரிக்காவிற்கும், நம்முடைய கூட்டணி மற்றும் நட்புறவு நாடுகளுக்கும், பிராந்தியத்திற்கும் மற்றும் இந்த உலகிற்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதை இச்சோதனை காட்டுகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

-lankasri.com