காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசுடன் கடுமையாக பேசுவோம்: கிளிநொச்சியில் இரா.சம்பந்தன் தெரிவிப்பு!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான பேச்சுக்களில் இனி அரசாங்கத்துடன் கடுமையாக பேசுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

sambanthan

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்கக் கோரி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று புதன்கிழமை 143வது நாளாக தொடர்கின்றது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இரா.சம்பந்தன் இன்று காலை சந்தித்துப் பேசினார். அதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், குடியேற்றம் விடயம், மக்களின் ஏனைய பிரச்சினைகள் எல்லாம் தீர வேண்டும். யுத்தம் முடிந்த பின்னர் ராஜபக்ஷ ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் தற்போது சில கருமங்கள் நடைபெறுவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதில் தாமதங்கள் இருக்கின்றன, பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. இருந்தும் இவை எல்லாவற்றையும் நாங்கள் முன்னெடுக்க வேண்டும். எல்லாவற்றையும் வெற்றிக்கொள்ளும் வகையில் விடயங்களை கையாள வேண்டும்.

நாங்கள் இந்த கருமங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால், அவகாசம் கொடுக்க வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது. அவகாசம் கொடுக்காது விட்டால் கைவிடப்பட்ட விடயமாக போய்விடும். எனவே இது சம்மந்தமாக இறுதி முடிவை மேற்கொள்வதற்கு கடும் முயற்சி எடுப்பேன்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நாங்கள் முயற்சி எடுக்காமல் இல்லை. முயற்சி எடுக்கின்றோம். ஆனால், இது மிகவும் சிக்கலான விடயம். ஒரு சிக்கலான விடயமாக இருந்தாலும், இந்த மக்களுக்கு ஒரு முடிவு வரவேண்டியது அத்தியாவசியம். முறையான விசாரணை நடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் என்ன நடந்தது என அறியப்பட்டு அவர்களின் உறவினர்களுக்கு பரிகாரம் அளிக்கப்பட்டு, அவர்களின் வாழக்கையில் அமைதி, நிம்மதி ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும். ஆகவே இந்த கருமத்தை நாங்கள் அரசுடன் தொடர்ந்து பேசியிருகிறோம். இதற்கு பிறகு மிகவும் கடுமையாக நாங்கள் நிற்போம்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: