தனிக்கட்சி தொடங்குகிறார்: கமல்ஹாசன்!

Kamal-Haasan1அரசியலில் களமிறங்க இருக்கும் நடிகர் கமல்ஹாசன், யாருடனும் கூட்டு சேராமல் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதோடு சமீபத்திய அவருடைய பேட்டிகள், டுவீட்டரில் பதிவிடும் கருத்துகள் எல்லாம் அரசியல் தொடர்பானதாகவே இருக்கின்றன. இதனால் அவர் விரைவில் அரசியல் களத்தில் இறங்கலாம் என தெரிகிறது. அதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.

அக்டோபரில், கமல் அரசியல் களத்தில் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது அரசியல் குறித்து பேசியிருக்கிறார். அதில், “நான் அரசியலில் களமிறங்கினால் நிச்சயம் தனிக்கட்சி தான் தொடங்குவேன், யாருடனும் கூட்டு சேர மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் கமல் மேலும் கூறியிருப்பதாவது, “எனக்கும் அரசியல் பற்றிய சிந்தனை உள்ளது. ஆனால் எந்த கட்சி கொள்கையுடனும் எனது சிந்தனைகள் ஒத்துப்போகாது. சமீபத்தில் நான் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தேன். உடனே நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய போவதாக செய்திகள் வந்தன. எனக்கு எந்த கட்சியுடனும் சேரும் எண்ணம் இல்லை. அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சி தான் தொடங்குவேன். ஆனால் இது நானாக எடுக்கும் முடிவாக இருக்காது, கட்டாயத்தின் பேரில் தான் இருக்கும்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது. அதற்கான நடவடிக்கை தான் சசிகலாவை அதிமுக., பொது செயலர் பதவியிலிருந்து நீக்கியதாக நான் கருதுகிறேன்.

இந்தியாவில் அரசியல் அமைப்பு தோல்வி அடைந்து விட்டது. இதில் மாற்றம் வரவேண்டும். ஒருவேளை நான் அரசியலில் வெற்றி பெற்று சொன்னதை செய்யவில்லை என்றால், உடனே என்னை அந்த பொறுப்பிலிருந்து அகற்ற வேண்டும். ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க கூடாது. இப்படியொரு நிலை உருவாக வேண்டும். இப்படியொரு மாற்றம் என் தமிழ்நாட்டில் இருந்து தொடங்க வேண்டும். ஏனென்றால் என் வீட்டை முதலில் சுத்தம் செய்துவிட்டு பிறகு என் அண்டை வீட்டை சுத்தப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.

என்னை சிலர் சந்தர்ப்பவாதி என்று சொல்லலாம். ஆமாம் நான் சந்தர்ப்பவாதிதான். நான் தீவிர அரசியலுக்கு வர சரியான நேரம் இது. எங்களுக்கு நல்ல ஆட்சி தேவை. மாற்றத்தை நான் ஆரம்பிப்பேன். இந்த மாற்றம் என் வாழ்நாளில் நிறைவேறாமல் போகலாம். அடுத்தடுத்து வருபவர்கள் இதை முன்னெடுத்துச் செல்வார்கள் என நம்புகிறேன்.

சரியான நேரத்தில் மாற்றம் ஆரம்பிக்கும், அதற்கான பணிகள் ஆரம்பமாகிவிட்டன. என்னை நீக்கிவிடலாம் என்று சிலர் கருதுகின்றனர். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, ‘ஒன்று நான் போவேன்; இல்லை அரசியலில் ஊழல் வெளியே போகும். இரண்டும் சேர்ந்து இருக்காது’.” என்றுள்ளார்.

-puthinamnews.com