அமைச்சர் ரியோட் எம்எசிசியில் பத்து மணி நேரம் இருந்தார்

 

மனிதவள அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் இன்று காலை மணி 10லிருந்து இரவு மணி 8 வரையில் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) புத்ரா ஜெயா தலைமையகத்தில் இருந்தார். திறன்கள் மேம்பாட்டு நிதி கழகத்திலிருந்து (பிடிபிகே) ரிம40 மில்லியன் தவறாகப் பயன்படுத்தப்பட்டது சம்பந்தப்பட்ட விசாரணையில் உதவுவதற்காக அவர் அங்கு சென்றிருந்தார்.

நேற்று, இந்த விசாரணையில் உதவுவதற்காக அமைச்சரின் 61 வயது அரசியல் செயலாளர் ஆறு நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டார். மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கடந்த இரண்டு வருடங்களாக ஒதுக்கப்பட்ட மானியத்தை உறிஞ்சியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

எம்எசிசிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அமைச்சர் ரிச்சர்ட் உறுதிமொழி அளித்துள்ளார். ஆனால், குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் ஒருவர் நிரபராதி என்று அவர் மேலும் கூறினார்.