மலாக்கா மஇகா எண்பது விழுக்காட்டு இந்தியர்களின் வாக்குகளைப் பெறும் நம்பிக்கையில் இருக்கிறது

எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் மலாக்கா மாநிலத்திலுள்ள இந்திய வாக்காளர்களில் 80 விழுக்காட்டினர் பிஎன்னுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை கொண்டுள்ளதாக மஇகா மாநில குழு உறுப்பினர் எம். எஸ் மகாதேவன் கூறுகிறார்.

இந்தியர்களின் நலன்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளதுடன் பல உதவிகளையும் அளித்துள்ளோம். மலாக்காவிலுள்ள இந்தியர்கள் அவர்களின் கண்களைத் திறந்து பார்த்து இன்று அவர்கள் அனுபவிக்கும் அனைத்து உதவிகளும் அவர்களுக்கு பிஎன் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றாரவர்.

பொறுப்பற்ற தரப்பினரால் அவர்கள் சுலபமாக தூண்டிவிடப்பட மாட்டார்கள் என்று தாம் நம்புவதாகவும் இன்று மலாக்காவில் அவரது திறந்த இல்ல உபசரிப்பில் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 2,000 மேற்பட்டவர்களில், மலாக்கா ஆளுனர் டாக்டர் முகமட் காலிட் யாக்கோப்பும் இருந்தார்.