போலிஸ் : தம்பூனில் இனமோதல் இல்லை

தம்புனில் மலாய்க்காரர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் சண்டை எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில், ஆண் ஒருவரின் கை வெட்டப்பட்ட நிலையில், பரவலாக உலாவந்த ஒரு வீடியோ தொடர்பில் போலிசார் கருத்துரைத்தனர்.

மாவட்டத் தலைமை போலீஸ் அதிகாரி, ஏ.சி.பி. சும் சாங் கியோங் போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக எந்தவொரு புகாரையும் பெறவில்லை என்றார்.

அதேசமயம், ஈப்போ கார்டனில் நடந்த மற்றொரு சம்பவம் தொடர்பான வீடியோவைப் பற்றி கருத்து தெரிவித்த அவர், இரு பெண்களிடமிருந்து இரண்டு புகார்கள் பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.

“ஞாயிற்றுக்கிழமை 1.30 மணியளவில், ஒரு பெண்மணி முதல் புகாரைச் செய்தார். ஒரு வங்கியின் முன், ஒருசில நபர்களால் தான் தாக்கப்பட்டதாக அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.”

“அப்பெண்ணின் விரல்கள், தலை மற்றும் கால்கள் மீது காயங்கள் ஏற்பட்டிருந்தன,” என்று அவர் புதன்கிழமை இரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இரண்டாவது சம்பவத்தில், அதேநாளில் இன்னொரு பெண் ஈப்போ கார்டனில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தின் முன் தான் தாக்கப்பட்டதாகப் புகார் செய்தார் என ஏ.சி.பி. சும் தெரிவித்தார்.

“அவருக்கும் தலை, கழுத்து, கால் மற்றும் உடல் பகுதிகளில் காயம் ஏற்பட்டிருந்தது. இரண்டு சம்பவங்களையும் குற்றவியல் பிரிவு 148-ன் கீழ் விசாரிக்கிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.