தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை

பெய்ஜிங், திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு மாநிலம் என்று கூறி கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து கடந்த 1959-ஆம் ஆண்டு தலாய் லாமா இந்தியாவுக்கு வந்து விட்டார்.

இதையடுத்து, அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா மீது அப்போது போர் தொடுத்து எல்லையில் சில பகுதிகளைக் கைப்பற்றியது. இப்போது வரை தலாய் லாமாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றே சீனா வலியுறுத்தி வருகிறது.  அதேபோல், தலாய் லாமாவை உலக தலைவர்கள் சந்திப்பதற்கும் சீனா தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், சீன மந்திரி ஜாங் ஜிஜோங் கூறியதாவது:- “எந்த நாட்டின் தலைவர்களும்  தலாய்லாமாவை சந்திப்பது என்பது எங்களின் பார்வையில், சீன மக்களின் உணர்வுகளுக்கு செய்யும் குற்றம் ஆகும். தலாய்லாமாவை ஒரு மத தலைவர் என எந்த நாடு வாதிட்டாலும் அதனை சீனா ஏற்காது. தலாய் லாமா வரலாற்றால் புறக்கணிக்கப்பட்டவர். மதத்தை மேல் அங்கியாக அணிந்த அரசியல் பிரமுகர். 1959-ல் வேறொரு நாட்டிற்கு தப்பி சென்ற தலாய்லாமா, தாய்நாட்டிற்கு துரோகம் செய்தவர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலாய் லாமாவை உலக தலைவர்கள் சந்திப்பதற்கு தொடர்ந்து சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தீபெத்தை சீனா நாட்டின் ஒரு அங்கமாக அங்கீகரிக்க வேண்டும் என்று உலக நாடுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

-dailythanthi.com