கடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நானா விவாத நிகழ்ச்சி ரத்து!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சியான நீயா நானாவில் இந்த வாரம் தமிழ் பெண்கள் அழகா, மலையாள பெண்கள் அழகா என்ற தலைப்பில் நடத்தப்பட்ட விவாதம் ஒளிபரப்பப்பட இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை.

நீயா நானாவில் தமிழ் பெண்கள் அழகா, மலையாள பெண்கள் அழகா என்ற நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானது. அப்போது இருந்து இதுகுறித்து பரவலாக அனைவராலும் பேசப்பட்டது.

சிலர் இதற்கு ஆதரவாகவும், சிலர் இதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஒளிபரப்பாகுவதாக ப்ரோமோ செய்யப்பட்ட தமிழ் பெண்கள் மற்றும் மலையாள பெண்களுக்கு இடையேயான நீயா நானா நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ஒளிபரப்படாமல் நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக வேறொரு நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது.

பெண்கள் குறித்த நீயா நானா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒரு நிகழ்ச்சி நீயா நானா ஆகும். வாரவாரம் ஞாயிற்றுக் கிழமை மதியம் மூன்று மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். ஒவ்வொரு வாரமும் ஏதவாது ஒரு தலைப்பின் கீழ் இரண்டு பிரிவினர் எதிர் எதிராக அமர்ந்து விவாதம் நடத்துவர். அதேபோல் இந்த வாரம் தமிழ் பெண்கள் அழகா , மலையாள பெண்களை அழகா என்ற தலைப்பின் கீழ் விவாதிக்கப்பட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட இருந்தது.

வைரல் ஆனா நீயா நானா ப்ரோமோ

இந்த தமிழ் பெண்கள் மற்றும் மலையாள பெண்கள் பங்குபெறும் நிகழ்ச்சியின் ப்ரோமோ விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் விஜய் டிவியின் பேஸ்புக், டிவிட்டர், யூ-டியுப் பக்கங்களிலும் இந்த ப்ரோமோ வெளியானது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு மிகவும் அதிகமானது. இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவாகவும் , எதிராகவும் நிறைய பேர் கருத்து தெரிவித்திருந்தனர். ஒரே நாளில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ மொத்தமாக வைரல் ஆனது.

நீயா நானா நிகழ்ச்சிக்கு எதிராக புகார்

இதையடுத்து இந்த நிகழ்ச்சி பெண்களை தவறாக சித்தரிப்பதாக நிறைய கருத்துக்கள் எழுந்தது. இது பெண்களை காட்சிப் பொருளாக மட்டுமே பார்க்கிறது , இது தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது எனவும் கூறப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக காஞ்சிபுரம் மக்கள் மன்றம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்டவை போலீசில் புகார் கொடுத்தன. இதனால் இந்த விஷயம் மிகவும் பெரிதானது.

நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை

இந்த விஷயம் பெரிதானதை அடுத்து ப்ரோமோ வீடியோக்கள் , ட்வீட்டுகள் ஆகியவை நேற்று இரவு நீக்கப்பட்டன. இன்று நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது அதிக அளவில் பிரச்சனை ஆனதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதையடுத்து இன்றைய நீயா நானாவில் ”சொந்த வீடு வாங்கலாமா வேண்டாமா” என்கிற தலைப்பின் கீழ் நடந்த விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பானது

tamil.oneindia.com

TAGS: