விமான பயணிகளை பாதிக்கும் அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு நடைமுறை

வரும் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ள புதிய பாதுகாப்பு நடைமுறைகளால் அமெரிக்காவுக்கு வரும் விமானங்கள் தாமதமாவதுடன், பயணக் கட்டணங்களும் உயரும் என்று விமான நிறுவனங்கள் கூறுகின்றன.

இந்தப் புதிய நடைமுறைகள் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது கணிசமான பொறுப்பை சுமத்தியுள்ளதாக ஆசியா பசிஃபிக் விமான நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

இனி நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகள் கூடுதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். அவை கடுமையான பாதுகாப்பு சோதனைகளை மட்டுமல்லாமல் பாதுகாப்பு விசாரணைகளுக்கான சாத்தியம் ஆகியவற்றையும் உள்ளடக்கும்.

நாளொன்றுக்கு, சுமார் 2,000 விமானங்களில் அமெரிக்காவுக்கு வரும் 3 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை இந்த நடவடிக்கைகள் பாதிக்கும்.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆஃப்பிரிக்க நாடுகளை சேர்ந்த பயணிகள் லேப்டாப் மற்றும் மின்னணு சாதனங்களை விமானக்களில் எடுத்து வர விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. -BBC_Tamil