நஜிப் : மக்களின்ஆசைகளைப் பூர்த்தி செய்வதுதான், 2018 வரவு செலவுத் திட்டத்தின் பெரிய சவால்

2018-ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதில், மிகப்பெரிய சவாலாக அமைந்தது மக்களின் எதிர்பார்ப்புகளை எந்த அளவுக்கு நிறைவேற்ற முடியும் என்பதுதான் என்று  பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார்.

இன்று ஊடக ஆசிரியர்களுக்கான விளக்கமளிப்பு கூட்டத்தில், 2018 வரவு செலவுத் திட்டத்தில், அனைத்து தரப்பினரும் அதிக நம்பிக்கையுடன் இருப்பதால், அதனைத் தயாரிக்க தனது குழுவினர் நீண்ட காலமாக, கடினமாக உழைத்ததாக பிரதமர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நிர்வாகத்தைப் பிரதிபலிப்பதால், வரவுசெலவு திட்டத்தின் இலக்குகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நஜிப் விரும்புகிறார்.

நாளை, பிற்பகல் 3.30 மணியளவில், 2018-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

“இரவு 7 மணிக்கு, மக்ரிப் தொழுகைக்கான நேரம் என்பதால், முதன்முறையாக பிற்பகல் 3.30 மணிக்கு வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது,” என்று நஜிப் கூறினார்.

மேலும், தனது உரை நீண்ட நேரம் இருக்காது என்றும் ஆனால், பல விஷயங்களைத் தொட்டு தான் பேசவுள்ளதாகவும் நஜிப் கூறினார்.

2018-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் எதை சொன்னாலும், செய்தாலும் அது பொதுத் தேர்தலுக்காகதான் என்று பேசப்படும், இதுவும் மற்றொரு பெரிய சவாலாக இருக்கிறது என்றும் அவர் சொன்னார்.

அவ்வாறு அடையாளப்படுத்துவது சுலபம் என்றாலும், அரசாங்கம் எப்போதும்போல அதன் திட்டங்களை அறிமுகப்படுத்தும் என்றார் நஜிப்.

உண்மையில், எதிர்க்கட்சி வரவுசெலவுத் திட்டம் இன்னும் பிரபலம் தேடுவதானது என்று அவர் கூறினார்.

“எதிர்க்கட்சி வரவுசெலவுத் திட்டம் உண்மைகளையும் புள்ளிவிவரங்களையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல, மேலும் அரசாங்க நிதிகளில் அது ‘பெரிய ஓட்டைகளை’ ஏற்படுத்திவிடும். அவர்களுக்கு உறுதியான தலைமை இல்லை, இது அவர்களின் வரவு செலவு திட்டத்தில் நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையின்மை ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது,” என்றும் நஜிப் கூறினார்.