மோடி அலை மங்கிவிட்டது ‘ராகுலுக்கு நாட்டை வழி நடத்தும் திறன் இருக்கிறது’ சிவசேனா சொல்கிறது

மும்பை, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14-ந் தேதிகளில் நடைபெறுகிறது. 18-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டது. மத்திய அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்ட விவகாரங்களை விமர்சனம் செய்து காங்கிரஸ் பிரசாரம் மேற்கொள்கிறது. பாரதீய ஜனதாவிற்கு எதிரான நிலைபாடு கொண்டவர்கள் ஒருங்கிணைக்கும் பணியையும் காங்கிரஸ் துரிதமாக செய்கிறது. குஜராத்தில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா, தொடர்ந்து பா.ஜனதா அரசுக்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

இப்போது மோடி அலை மங்கிவிட்டது, ‘ராகுலுக்கு நாட்டை வழி நடத்தும் திறன் இருக்கிறது’ என கூறிஉள்ளது.

சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் எம்.பி. தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசுகையில், ‘‘2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது நரேந்திர மோடியின் அலை இருந்தது. ஆனால் இப்போது அது மங்கிவிட்டதாக தெரிகிறது. ஜி.எஸ்.டி. வரிமுறை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் குஜராத்தில் அதற்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். பா.ஜனதா அங்கு சவாலை சந்திக்க போகிறது’’ என்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நாட்டை வழிநடத்தி செல்கிற திறன் இருக்கிறது. அவரை பப்பு என்று கிண்டல் செய்வது தவறு எனவும் குறிப்பிட்டார்.

‘‘இந்த நாட்டின் மிகப்பெரிய அரசியல் சக்தி என்றால் அது மக்கள்தான். அதாவது, வாக்காளர்கள்தான்’’ எனவும் குறிப்பிட்டார் சஞ்சய் ராவுத்.

-dailythanthi.com

TAGS: