அரச வேலை வாய்ப்புக்களில் தமிழ் மக்கள் புறக்கணிப்பு: சம்பந்தன்

“அரச வேலை வாய்ப்புக்களில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இனி இந்த நிலை திருத்தப்பட வேண்டும். இவ்வாறான விடயங்கள் மக்களின் சமத்துவத்தைப் பாதிக்கும்.

எனவே, அரசாங்க அதிகாரிகளும் இவ்விடயத்தில் சமத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “புதிய அரசியலமைப்பில், பிரிக்க முடியாத நாடே உருவாகின்றது. அதனடிப்படையில், நாட்டில் உள்ள சகல மக்களும் ஒற்றுமையுடனும் சமத்துவத்துடனும் வாழமுடியும்.

உத்தியோகபூர்வ மொழி சிங்களமும் தமிழுமாகும். அதனடிப்படையில், ஏழு மாகாணங்களில் சிங்கள மொழியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியும் உத்தியோகபூர்வ மொழியாகப் பயன்படுத்தப்படும் விதத்தில் அரசியல் யாப்பு உருவாகவுள்ளது.

நாம் தற்போது 2017இன் இறுதியிலும் 2018 பிறக்கவும் உள்ள காலப்பகுதியில் உள்ளோம். எதிர்வரும் நாட்களில் பல தேர்தல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒற்றுமையாகவும் நிதானமாகவும் செயற்பட வேண்டும்.

பிரதேச சபைகளில், மக்களின் இன விகிதாசாரங்களின் அடிப்படையில் உத்தியோ பூர்வ மொழிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். அரச அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படுகின்ற கடிதங்கள், யாருக்கு அனுப்பப்படுகின்றதோ, அவர்களின் மொழியில் அமைந்திருக்க வேண்டும். அரச உத்தியோகங்களில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இனி இந்த நிலை திருத்தப்பட வேண்டும். இவ்வாறான விடயங்கள் மக்களின் சமத்துவத்தைப் பாதிக்கும். எனவே, அரசாங்க அதிகாரிகளும் இவ்விடயத்தில் சமத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: