முன்னாள் தூதர், பாஸ் கட்சியிலிருந்து டிஏபிக்கு மாறினார்

முன்னாள் தூதர் இயொப் அட்லான் ச்சே ரோஸ், 74, பினாங்கில் பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் மேல் ஏற்பட்ட நம்பிக்கையால் டிஏபியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கடந்த 2004-ஆம் ஆண்டு, உலு லங்காட் நாடாளுமன்ற தொகுதியில், பாஸ் சார்பாக அவர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

டிஏபி-யின் சமூக ஊடகங்களில், நவம்பர் 2-ஆம் தேதி முதல் டிஏபி-யில் அவர் இணைந்தது  பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பினாங்கு அரசாங்கம் மலாய்க்காரர்களுக்கு எதிரானது அல்ல, மேலும், இஸ்லாம் வளர்ச்சிக்கு அது பங்களிப்பு செய்கிறது என்ற நம்பிக்கை வந்ததாலேயே அவர் அக்கட்சியில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.

“அவர்களின் இஸ்லாமியத் துறை வருடத்திற்கு 14 மில்லியன் ரிங்கிட் கொடுக்கிறது,” என்று அக்கட்சியில் சேர்வதற்கு, அவருக்கு எப்படி ஆர்வம் வந்தது என்று, ரோக்கேட்.கினி-க்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பினாங்கு மாநிலம் போன்று நிர்வாகம் கொண்ட நாட்டில், மலாய்க்காரர்களால் முன்னேற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இயொப் அட்லான், பினாங்கின் கடன் விகிதம் RM680 மில்லியனில் இருந்து RM66 மில்லியனுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது, இது டிஏபி-யின் தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதார நிர்வகிப்புத் திறனைக் காட்டுகிறது என்றார்.

மலாய்க்காரர்களின் நிலையைப் பற்றி சிந்தித்ததால், தான் பாஸ் கட்சியில் சேர்ந்ததாகவும், ஆனால், அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மலாய்க்காரர்களின் தலைவிதியை மாற்றுவதற்கான அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்ததாக அவர் கூறினார்.

“பாஸ் கட்சி ஒரு தீர்வு காணும் என நினைத்தேன், ஆனால், அதனால் எதுவும் செய்ய இயலவில்லை,” என்று அவர் கூறினார்.

பாஸ் கட்சியின் உறுப்பினரான இயோப் அட்லான், ஒரு காலகட்டத்தில் பிகேஆர் கட்சிக்கு இரவல் கொடுக்கப்பட்டு, அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, 2009 ஏப்ரலில் அவர் மீண்டும் பாஸ் கட்சிக்கே திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1974 பொதுத் தேர்தலில், இயோப்பின் தந்தை டிஏபி சார்பில் அலோர் பொங்சுவில் போட்டியிட்டுள்ளார். எனவே, டிஏபி தனக்கு புதியதொரு கட்சியல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.